2025 நவம்பர் ஒன்றாம் தேதிக்குள் கேரளம், ஒரு குடும்பம் கூட வறுமையில் வாடாத நிலையை எட்டும் என முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார். கேரளத்தில் 64,006 குடும்பங்கள் மிகவும் ஏழ்மை நிலையில் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி வரை கிட்டத்தட்ட 40,000 குடும்பங்கள் தீவிர வறுமையில் இருந்து மீட்கப்பட்டன. இந்த ஆண்டு நவம்பர் மாதத்திற்குள் கிட்டத்தட்ட அனைவரும் தீவிர வறுமையில் இருந்து விடுபடுவார்கள். 2025 நவம்பர் 1 க்குள், கேரளத்தில் ஒரு குடும்பம் கூட மிகவும் வறுமையில் இருக்க முடியாது. இதை நாட்டிலுள்ள எந்த மாநிலமும் சொல்ல முடியுமா? எல்.டி.எப் அரசு தான் அறிவித்ததை செயல்படுத்துகிறது. சமூக நல ஓய்வூதியத்தை ஒன்றிய நிதி அமைச்சர் கேவலப்படுத்துகிறார். இவ்வளவு பேருக்கு ஏன் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது என்பது அவர்களின் கேள்வி. விவசாயத் தொழிலாளர் ஓய்வூதியம் ரூ.45இல் தொடங்கியது. அப்போது சிலர் கடுமையாக எதிர்த்தார்கள். ஆனாலும் நாங்கள் விடவில்லை. ஒரு பிரிவினருக்கு மட்டும் என நிறுத்தாமல் பல பிரிவுகளுக்கும் அது பரவியது. 2016இல் எல்.டி.எப் அரசு ஆட்சிக்கு வந்தபோது ஓய்வூதியம் ரூ.600 ஆக இருந்தது. யூடிஎப் அரசு ஒன்றரை ஆண்டுகள் வரை நிலுவைத் தொகையை வைத்திருந்தது. முதலில் நிலுவைத் தொகை செலுத்தப்பட்டது. பின்னர் ஓய்வூதியம் 600 ரூபாயில் இருந்து 1600 ரூபாயாக உயர்த்தப்பட்டது. இதையும் அதிகரிக்க எல்டிஎப் விரும்புகிறது. ஆனால், அதைத் தடுக்க என்ன செய்யலாம் என்று ஒன்றிய அரசு பார்த்துக் கொண்டிருக்கிறது என்றார் முதல்வர். மாவேலிக்கரை மக்களவைத் தொகுதியின் எல்.டி.எப் வேட்பாளர் (சிபிஐ) சி.ஏ.அருண்குமாரை ஆதரித்து நடந்த பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக பர்னிகாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதல்வர் பினராயி விஜயன் பேசினார்.