states

img

மோடி அரசின் உச்சக்கட்ட அலட்சியமே ரயில்வேயின் சீர்குலைவுக்கு காரணம்!

புதுதில்லி, ஜூன் 7- ரயில்வே நிர்வாகத்தில் குறைபாடுகள் அதிகம் உள்ளன என கடந்தாண்டே (2022) கவலை எழுப்பிய சிஏஜி அறிக்கையை ஒன்றிய மோடி அரசு கண்டுகொள்ளாத தன் விளைவுதான் ஒடிசா விபத்துக்கு காரணமாக அமைந்துள்ளது என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன.   ஒடிசா மாநிலம்  பாலசோர் அருகே கோரமண்டல் எக்ஸ்பிரஸ் 3 ரயில்கள் அடுத்தடுத்து மோதிய விபத்தில் 288 பேர் பலியானார்கள். நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தில் விபத்து நடந்து நான்கு நாட்களாகியும் விபத்திற்கான உண்மையான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. தற்போது சிபிஐ விசாரணை துவங்கி நடைபெற்று வருகிறது.  இந்நிலையில் பாதுகாப்பு நடவடிக்கைகளில் போதிய பணியாளர்கள் இல்லாதது, தண்டவாளங்களைப் புதுப்பிக்காதது, முன்னுரிமை அடிப்படையில் ரயில்வே நிதியைப் பயன்படுத்தாதது, விபத்துகளுக்குப் பிறகு விசாரணை அறிக்கைகளை சமர்ப்பிக்கவோ அல்லது ஏற்கவோ தவறியது மற்றும் ஆய்வுகளில் கடுமையான குறைபாடுகள் ஆகியவை தீவிரமான கவலைகளாக இருப்பதாக கடந்த 2022இல் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் (சிஏஜி) அறிக்கை வெளியிட்ட அறிக்கை யை உற்றுநோக்கினால் ஒடிசா விபத்திற்கு ஒன்றிய மோடி அரசின் அலட்சியமே காரணம் என்பதை உறுதி செய்ய முடிகிறது.

சிஏஜி சுட்டிக்காட்டிய குறைபாடுகள்

1    ஏப்ரல் 2017 முதல் மார்ச் 2021 வரை 422 முறை தடம் புரண்டுள்ளன. மோசமான பாதை பராமரிப்பு, அதிக வேகம் மற்றும் இயந்திரக் கோளாறு  காரணமாகவே இவை தடம் புரண்டுள்ளன.

2  டிராக் ரெக்கார்டிங் கார்கள் மூலம் ரயில் தண்ட வாளத்தின் வடிவியல் மற்றும் கட்டமைப்பு நிலைக்கானஆய்வு செய்யும் பணிகளில் 30-100% வரை குறைபாடு உள்ளது.

3  ரயில் வழித்தட பராமரிப்பு பணிகளை (டிஎம்எஸ் - TMS) ஆன்லைன் மூலமாக கண்காணிக்க முடியும்.ஆனால் டிஎம்எஸ் கண்காணிப்பு நடைமுறை ஒழுங்காக செயல்படவில்லை. டிஎம்எஸ் இயந்திரங்கள் 
செயலிழந்திருப்பது, பணியாளர்கள் இல்லாதது (5%), செயல்பாட்டு சிக்கல்கள் (19%), பிரிவுகளால் திட்டமிடப்படாத தொகுதிகள் (30%), இயக்கத் துறையால் கொடுக்கப்படாத தொகுதிகள் (32%). ஆகியவற்றால் ரயில் வழித்தட பராமரிப்பு பணியில் மந்தமான நிலை உள்ளது.

4  கடந்த 2017 முதல் 2021 மார்ச் வரை பொறியியல் குறைபாடு காரணமாகவே, 400-க்கும் மேற்பட்ட ரயில் தடம் புரண்ட சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. இதில் தண்டவாளங்களை முறையாக பராமரிக்காததால் 171 முறை ரயில்கள் தடம் புரண்டுள்ளன. 

5  மெக்கானிக் துறையின் குறைபாடு காரணமாக 182 முறை  ரயில்கள் தடம் புரண்டுள்ளன. சக்கர விட்டம் மாறுபாடு, பெட்டிகளில் உள்ள குறைபாடுகள் ஆகியவை தடம் புரண்டதற்கு 37% பங்களிப்பாக உள்ளன.

6  ஆப்பரேட்டிங் துறையின் தவறு காரணமாக 275 முறை ரயில்கள் விபத்துக்குள்ளாகின.

7    லோகோ பைலட்டின் (ரயில் ஓட்டுனர்) தவறு காரணமாக 154 முறை ரயில்கள் விபத்தில் சிக்கியுள்ளன. ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக மற்றும் லோகோபைலட்டுகளின் நீண்ட நேர வேலை அழுத்தங்களே இத்தகைய விபத்துக்கள் அதிகரித்து வருவதற்கு முக்கிய காரணம் என்று தெரிகிறது.

8  ரயில் விபத்து தொடர்பான 63% சம்பவங்களில் இன்னும் ஆய்வறிக்கை சமர்ப்பிக்கவில்லை. 49 சம்பவங்களில் அறிக்கையை ஏற்பதில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் தாமதம் செய்துள்ளனர். புரியும்படி சொன்னால் 16 
ரயில்வே மண்டலங்களில் நிகழ்ந்த தடம் புரண்ட  விபத்துகள் பற்றிய 1,129 வழக்குகளில் விசாரணை அறிக்கைகளை ஆய்வு செய்த பின்பு  23 காரணங்கள் கண்டறியப்பட்டன. இந்த 23 காரணங்களில் முக்கிய காரணியாக  இருப்பது தண்டவாளங்கள் பராமரிப்பின்றி (தடம்) இருத்தல் ஆகும். தண்டவாளங்களை பராமரிப்பின்றி வைத்திருப்பது தொடர்பாக 171 சம்பவங்கள், வரம்பு மீறி பாதையில் விலகல் தொடர்பாக 156 சம்பவங்கள், கவனமின்றி ரயில்களை   ஓட்டுதல் மற்றும் தண்டவாளத்தின் தன்மையை  மீறி அதிக வேகமாக ரயில்களை இயக்குதல் தொடர்பாக 154 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

9  விதிமுறைகள் மற்றும் ஒருங்கிணைந்த உத்தரவுகள், பல்வேறு துறைகள் இடையேயான தொடர்பு, உரிய ஆய்வு ஆகியவற்றை முறையாக மேற்கொள்ளாததே பெரும்பாலும் ரயில் தடம் புரளும் சம்பவங்களுக்கு காரணமாக அமைகின்றன.

10  தண்டவாளங்கள் புனரமைப்பு பணிக்கு 2018 - 19-இல் ரூ.9607.65 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், 2019-2020-இல் ரூ.7417 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டது. தண்டவாள புனரமைப்பு பணிக்காக ஒதுக்கப்பட்ட குறைந்த தொகையும் கூட முழுமை யாக பயன்படுத்தவில்லை. 2017 முதல் 21 வரையிலான காலகட்டங்களில் ரயில் தடம் புரண்டதில் 26% தண்டவாளங்கள் முறையாக பராமரிக்கப்படாததன் காரணமாகவே நிகழ்ந்தன.  

11  27,763 ரயில் பெட்டிகளில் (62%) தீயை அணைக்கும் கருவிகள் வழங்கப்படவில்லை. 

12  கடந்த ஆண்டு (2021-22) 35 விபத்துக்கள் பதிவாகிய நிலையில், 2022-23 ஆம் ஆண்டில் தொடர்ச்சியாக 48 ரயில் விபத்துக்கள் நிகழ்ந்துள்ளன. 2022-23இல் நிகழ்ந்த உயிர், சொத்து இழப்பு என ரூ.32.96 கோடி அளவில் ரயில்வே துறைக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. 

13   ராஷ்ட்ரிய ரயில் சுரக்சா கோஷ் (RRSK) என்ற பெயரில் 2017 முதல் 2018 வரை 20,000 கோடி ரூபாயில் நிதியம் உருவாக்கப்பட்டது. இந்த திட்டத்திற்கான நிதி ஐந்தாண்டுகளில் ரூ.1 லட்சம் கோடியாக வளர வேண்டும். ஆனால் குறைந்த அளவு நிதி ஒதுக்கீடு காரணமாக வெறும் ரூ.15,775 கோடி மட்டுமே உள்ளது.ரயில்வே துறையில் இவ்வளவு குறைபாடுகள் இருப்பதை ஓராண்டுக்கு முன்னரே சிஏஜி அறிக்கை மூலம் எச்சரிக்கை விடுத்திருந்தது. ஆனால் எச்சரிக்கையை கண்டுகொள்ளாமல் மோடி அரசு அலட்சியமாக இருந்ததன் விளைவாக ஒடிசாவில் 288 உயிர்களை காவு வாங்கியுள்ளது.