states

33 சதவீத இட ஒதுக்கீடு சட்டத்தை இதுவரை இயற்றாதது ஏன்?

புதுதில்லி,பிப்.3- பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு சட்டத்தை ஒன்றிய  அரசு இதுவரை இயற்றாதது ஏன்? என்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் திமுக  எம்.பி., ஆர்.எஸ்.பாரதி கேள்வி எழுப்பினார்.   மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31 ஆம் ஜனாதிபதி உரையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. பிப்ரவரி 1 ஆம் தேதி மக்களவையில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து ஜனாதிபதி உரை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. மாநிலங்களவையில் ஆர்.எஸ். பாரதி பேசுகையில்,  மாநில அளவில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களுக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளிப்பதில்லை. நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் மசோதா தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு தேவை; நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் மசோதாவுக்கு ஒப்புதல் தேவை. ஒரு காலத்தில் மருத்துவத்துறையில் 95 சதவீதம் பேர் உயர் சமூகத்தை சேர்ந்தவர்களாக இருந்தார்கள்.  இட ஒதுக்கீட்டுக்காக தமிழ்நாடு கொடுத்த அழுத்தத்தின் காரணமாகவே முதன்முதலில் அரசமைப்புச் சட்டம் திருத்தப்பட்டது. இதனையடுத்து பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு சட்டத்தை ஒன்றிய அரசு இதுவரை ஏன்  இயற்றவில்லை என்று கேள்வி எழுப்பினார்.