புதுதில்லி, ஜன. 13 - குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கரின் ‘நாடாளுமன்ற இறையாண்மை’ தொடர்பான கருத்துக்கள் இந்திய அரசி யலமைப்புச் சட்டத்திற்கு பெரும் ஆபத்து விளைவிக்கும் நோக்கம் கொண்டவை என சீத்தாராம் யெச்சூரி விமர்சித்துள்ளார். குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், நாடாளுமன்ற இறையாண்மை எந்த வகையிலும் நீர்த்துப் போக விடக்கூடாது என்றும், மக்களின் தீர்ப்பை செல்லாததாக்கும் வகையில் எந்தவொரு அமைப்பும் அதிகாரம் கொண்டதாக இருக்க முடி யாது என்றும் கூறியுள்ளார். ‘மக்கள் கருத்தே முதன்மையானது’ என்று கூறுவது போலக் காட்டி, அரசி யலமைப்புச் சட்டத்தின் முதன்மை அதிகாரத்தை ஜெகதீப் தன்கர் திட்டமிட்டு கேள்விக்குள்ளாக்கி யுள்ளார்.
இதுதொடர்பாக விமர்சனக் கருத்து வெளியிட்டுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கூறியிருப்பதாவது: இந்திய அரசியலமைப்புச் சட்டம் தான் நாடாளுமன்றத்தை நிறுவி யது. நிர்வாகம் (அரசாங்கம்), நாடாளு மன்றம் மற்றும் நீதித்துறை ஆகிய அனைத்து அமைப்புகளுமே ஆளு மையையும் அதிகாரத்தையும் அரசியலமைப்புச் சட்டத்திடமிருந்தே பெறுகின்றன. மாறாக வேறு வழியில் இந்த அமைப்புகளுக்கு அதி காரம் கிடைக்கப்பெறவில்லை. எனவே அரசியலமைப்புச் சட்டமே உயர்வானது; முதன்மையானது. பெரும்பான்மை பலம் பெற்றதால் அதைப் பயன்படுத்தி தனது அதி காரத்தையெல்லாம் செலுத்துகிற எந்தவொரு அரசாங்கமும், நமது குடி யரசின் அடிப்படைக் கட்டமைப்பை கேள்விக்குள்ளாக்கிவிட முடியாது. பெரும்பான்மை எனும் அதிகாரபலம், சர்வாதிகாரமாக மாறிவிடும் அபாயத்திலிருந்து நம்மைநாமே பாது காத்துக் கொள்வதற்குத்தான் அரசி யலமைப்புச் சட்டம் எனும் அடிப் படைக் கட்டமைப்பு உருவாக்கப் பட்டுள்ளது.
இதே அரசியலமைப்புச் சட்டத்தின் படி பதவிப்பிரமாணம் செய்து கொண்டவர்தான் மாண்புமிகு குடி யரசுத் துணைத் தலைவர் அவர்கள். ஆனால் அவர் இப்போது அதே அரசி யலமைப்புச் சட்டத்தையும் அதன் அதிகார மேன்மையையும் கேள்விக்கு உள்ளாக்குகிறார். நமது அரசியலமைப்புச் சட்டத்தின் மையமான கருத்து, இந்தியாவின் இறையாண்மையை அதன் மக்களு டன் இணைக்கிறது. அதனால்தான், “மக்களாகிய நாங்கள்...” என்ற பதத்துடன் அது துவங்குகிறது. இந்த அதிகார மேன்மையை, அரசின் பிற எந்தவொரு அமைப்பாலும் மாற்றி விட முடியாது. மக்கள் தங்களது பிரதிநிதிகளை தற்காலிகமாக ஐந்தாண்டுகளுக்கு மட்டும் தேர்ந்தெடுக்கிறார்கள். இதன் மூலம் மக்களே உயர்ந்தவர்கள் எனும் தங்களது இறையாண்மையை நிறுவு கிறார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் தங்களுக்கிடையே ஓர் அரசாங்கத்தை அமைக்கிறார்கள். இப்படி தேர்ந்தெடுக்கப்படும் அரசாங்கத்தின் நிர்வாகம், சட்ட மியற்றும் நாடாளுமன்றத்திற்கு பதில்சொல்ல கடமைப்பட்டது; அந்த நாடாளுமன்றத்தின் உறுப்பினர்கள் மக்களுக்கு பதில் சொல்ல கடமைப் பட்டவர்கள்.
அரசியலமைப்புச் சட்டத்தின் இத்தகைய நடைமுறை வரிசையில் மக்களின் இறையாண்மை என்பது எந்த இடத்திலும் மாற்றி அமைக்கப் படக்கூடியதோ அல்லது வேறு ஒன்றால் இட்டு நிரப்பப்படக்கூடியதோ அல்ல. இதற்கு மாறாக சமீபகாலமாக நமது இந்தியக் குடியரசின் மதச்சார் பற்ற ஜனநாயக குணாம்சத்தை நீக்கி விட்டு, அந்த இடத்தில் சகிப்புத்தன்மை யற்ற, வெறிபிடித்த பாசிசத் தன்மை கொண்ட இந்துத்துவா ராஜ்ஜியத்தை நிறுவுவதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. இதன் ஒரு பகுதி யாகவே அரசியலமைப்புச் சட்டத்தை மலினப்படுத்தி, மக்கள் மீது அன்பு உள்ளவர்கள் போலக் காட்டிக் கொண்டு, நாடாளுமன்றமே உயர்ந்தது என்று புதிய வகைக் கருத்துக்கள் வெளிப்படுகின்றன. இத்தகைய முயற்சிகளை இந்திய மக்கள் முற்றாக நிராகரிக்க வேண்டும். கடுமையாக எதிர்க்க வேண்டும். இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி கூறியுள்ளார்.