states

போர் வெறி வேண்டாம் ஜெர்மனியில் மக்கள் ஆவேசம்

பெர்லின், ஜூன் 12- ஐரோப்பிய நாடுகளில் போர்ப் பயிற்சிகள் என்ற பெயரில் போர் வெறியைத் தூண்டும் முயற்சி கூடாது என்று ஜெர்மனி மக்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். பல நாடுகளில் போர்ப்பயிற்சிகள் நடப்பது போன்று “ஏர் டிஃபென்டர் 23”  என்ற பெயரில் அமெரிக்கா தலைமையிலான ராணுவக் கூட்டணியான நேட்டோவின் போர்ப்பயிற்சி ஜெர்மனியில் நடக்கவிருக்கிறது. இதுவரை இல்லாத அளவுக்கு பெரிய பயிற்சியாக இது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்தகைய பயிற்சிகள் வேண்டாம் என்று ஜெர்மனியின் பல பகுதிகளில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.   நேட்டோவின் போர்ப்பயிற்சிகள் போரை ஊக்குவிக்குமே தவிர, அமைதிக்கான வழியை ஏற்படுத்தாது என்ற கருத்து எழுந்திருக்கிறது. அதோடு, உக்ரைனில் போர் நிறுத்தப்பட வேண்டும் என்றும், தங்கள் மண்ணில் இருந்து அமெரிக்காவின் அணு ஆயுதங்கள் அகற்றப்பட வேண்டும் என்றும் கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்கள். பெர்லினில் மட்டுமில்லாமல் நாட்டின் பல்வேறு நகரங்களில் கண்டனப் பேரணிகள் நடந்து வருகின்றன. தன்னுடைய ராணுவக் கூட்டாளிகளுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் இது இருக்க வேண்டும் என்று அமெரிக்கா விரும்புகிறது. 10 ஆயிரம் வீரர்கள் பங்கேற்கவிருக்கும் இந்தப் பயிற்சியில் அமெரிக்காவில் இருந்து மட்டும் 2 ஆயிரம் வீரர்கள் கலந்து கொள்கிறார்கள். 12 நாட்கள் தொடர்ந்து நடக்கும் இந்தப் போர்ப் பயிற்சி, தேவையற்ற பதற்றத்தையே உருவாக்கும் என்று சமூக அமைப்புகளின் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.