புதுதில்லி,மார்ச் 16- ஹிஜாப் மேல்முறையீட்டு வழக்கு ஹோலி விடுமுறைக்கு பிறகு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் இந்துத்துவா கும்பல், இஸ்லாமிய மாணவிகள் அணியும் ஹிஜாப்புக்கு எதிராக கல்வி நிறுவனங்களில் தகராறில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து கர்நாடக பாஜக அரசு கல்வி நிறுவனங் களில் ஹிஜாப் அணிய தடை விதித்தது. இந்த தடைக்கு எதிராக இஸ்லாமிய மாணவிகள் தொடுத்த வழக்கை கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி தலைமையிலான அமர்வு விசாரணை நடத்தியது. முடிவில், ஹிஜாப்புக்கு கர்நாடக அரசு தடை விதித்தது செல்லும் என்று அதிர்ச்சியான தீர்ப்பை வழங்கியது. இதனை அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்புகள் விமர்சித்தன. கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து கர்நாடக மாணவிகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்கவும் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், ஹோலி விடுமுறைக்கு பின் விசாரணையை பட்டியலிடு வது குறித்து பரிசீலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.