states

img

உணவு மானியம் வெட்டிக் குறைப்பு மக்களை பட்டினியில் தள்ளும் மோடி அரசு

புதுதில்லி, ஜன.2- நடப்பு நிதியாண்டில் உணவு மானியத்தை 30 சதவிகிதம் குறைக்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. 2020-21இல் ரூ.5.29 லட்சம் கோடியாக இருந்த உணவு மானியம், இந்த ஆண்டு ரூ.3.72 லட்சம் கோடியாகக் குறையும். எப்சிஐ கையிருப்பில் உள்ள 71.4 லட்சம் டன் அரிசியும் கோதுமையும் வெளிச்சந்தையில் விற்கப்படும்.

இது முந்தைய ஆண்டில் விற்றதைவிட மூன்று மடங்கு அதிகமாகும். எப்சிஐயால் கொள்முதல் செய்யப்படும் உணவு தானியங்களை பொதுச் சந்தைக்கு விற்பது தாராளமயமாக்கல் கொள்கையின் ஒரு பகுதியாகும் என எப்சிஐ தலைவர் அதீஷ் சந்திரா கூறினார். கடந்த ஆண்டு உணவு மானியத்திற்காக செலவிடப்பட்டதில் பெரும்பகுதி தேசிய சேமிப்புத் திட்டங்களில் இருந்து எப்சிஐ பெற்ற கடன்களை திருப்பி செலுத்துவதற்காகத்தான். பெருந்தொற்று நோய்களால் நாட்டில் பட்டினி அதிகரித்துள்ள நிலையில், உணவு மானியத்தை ஒன்றிய அரசு குறைத்திருப்பது குற்றகரமான நடவடிக்கை என்று சிபிஎம் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கூறியுள்ளார்.

மக்களுக்கு உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்படுவதாக பிரதமர் கூறுகிறார். மத்திய உணவுக் கிடங்குகளில் சேமித்து வைக்கப்பட்ட ஆறு கோடி டன் உணவு தானியங்கள் வீணாகி வருகின்றன. மக்கள் பட்டினி கிடக்காமல் இருக்க உணவு தானியங்களை விநியோகிக்க வேண்டும் என்றும் யெச்சூரி வலியுறுத்தியுள்ளார்.