states

img

விண்ணில் பறக்கும் விலைவாசி

இந்தியாவில் உணவுப் பொருள் பணவீக்கம் 2024 பிப்ரவரியில் மேலும் உயர்ந்துள்ளது. ஜனவரியில் 8.3 சதவீதமாக இருந்த இது, பிப்ரவரியில் 8.66 சதவீதமாக உயர்ந்துள்ளது. 8.66 சதவீதம் உணவுப்பொருள் பணவீக்கம் என்றால், கடந்த ஆண்டு பிப்ரவரியில் ஒரு வீட்டிற்கு மளிகைப் பொருட்கள் வாங்க ரூ.3,000 செலவாகியிருந்தால், இந்த ஆண்டு ரூ.3,259.80 ஆகியிருக்கிறது என்று பொருள். கூலி, சம்பளம் உயராமல், உணவுக்கான மாதச் செலவு இவ்வளவு உயர்கிறது என்பதுதான் இது. அந்தப் புரிதலுடன் பார்த்தால், இந்த 8.66 சதவீதம் என்பது எவ்வளவு தீவிரமான பிரச்சனை என்பதும், மக்கள் மீது அக்கறையுள்ள அரசாக இருந்தால் இதைச் சரி செய்வதில் கவனம் செலுத்தியிருக்கும் என்பதும் புரியும்.

8.66 சதவீதம் என்பது இந்தக் கணக்கீடுகளுக்கு எடுத்துக் கொள்ளப்படுகிற உணவுப்பொருட்களின் விலை உயர்வின் சராசரிதான். உண்மையில் தக்காளி 42.01 சதவீதம், வெங்காயம் 22.1 சதவீதம் என்றெல்லாம் தனித்தனியான விலைகள் உயர்ந்துள்ளன. காய்கறிகளின் சராசரி பணவீக்கம் கடந்த மாதத்தில் 30.25 சதவீதம் என்று அரசின் தரவுகள் கூறுகின்றன. தோட்டப் பயிர்களின் விளைச்சல் இவ்வாண்டு குறைவாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த நிலை இன்னும் மோசமாகும் என்று பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.  ஒருபுறம் விலைவாசி உயர்ந்துகொண்டிருக்க, மறுபுறம் தொழில்துறை உற்பத்தியின் வளர்ச்சி குறைந்துள்ளதாகவும் அரசின் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இவை பற்றியெல்லாம் கவலைப்படாமல் நாளொரு வேடம், பொழுதொரு ஃபோட்டோஷூட் என்று திரிகிற பிரதமரை நாம் பெற்றிருக்கிறோம். இதை மாற்றுவதற்கான வாய்ப்பு தான் இந்தத் தேர்தல்.