ஐ.நா.சபை, மே 25- பாலஸ்தீனத்திற்குச் சொந்தமான நிலங்கள் மற்றும் வளங்களை ஆக்கிரமிப்பு செய்வதை இஸ்ரேல் நிறுத்த வேண்டும் என்று சீனா வலியுறுத்தியுள்ளது. பாலஸ்தீனத்தில் நிலவும் நிலைமை உள்ளிட்டு மத்திய ஆசியாவில் உள்ள அரசியல் நிலவரங்கள் பற்றி விவாதிப்பதற்காக நடந்த ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பேசுகையில் சீனாவின் துணை நிரந்தரப் பிரதி நிதியான கெங் ஷுவாங், “தனது நடவடிக்கைகளை இஸ்ரேல் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். பாலஸ்தீன மக்களின் நிலங்கள் மற்றும் வளங்களை ஆக்கிரமிப்பு செய்யும் நடவடிக்கைகள் கூடாது” என்று குறிப்பிட்டார். மேலும் பேசிய அவர், “ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பகுதிகளில் சட்டவிரோதமாக மக்களைக் குடியமர்த்தும் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும். இத்தகைய குடியமர்த்தும் பணிகள் சர்வதேச சட்டம், பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானம் 2334 ஆகியவற்றை மீறுவதாகும். நடப்பாண்டின் தொடக்கத்தில் இருந்து ஏராளமான புதிய குடியிருப்புகளை இஸ்ரேல் உருவாக்கி வருகிறது” என்றார். நடப்பாண்டின் தொடக்கத்தில் இருந்து குழந்தைகள் உள்ளிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். “பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள், பொதுக் கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றைக் குறி வைத்து நடக்கும் தாக்குதல்களை சம்பந்தப்பட்ட அனைவரும் நிறுத்த வேண்டும்” என்று கெங் ஷுவாங் இஸ்ரேலை வலியுறுத்தினார். பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்கள் அனைவரும் இஸ்ரேல் மீது அழுத்தம் தர வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது.