states

img

நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறை ரூ. 12 லட்சத்தைத் தொட்டது..!

புதுதில்லி, பிப். 18 - 2022 டிசம்பரில், நாட்டின் ஏற்றுமதி - இறக்குமதி முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளது. எனினும், வர்த்தகப் பற்றாக்குறையும் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளது. இந்தியாவின் வர்த்தக ஏற்றுமதி மற்றும் இறக்குமதி விவரங்களை ஒன்றிய அரசின் வர்த்தகத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதன்படி 2022 ஜனவரியில் பொறியியல், பெட்ரோலியம், நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் துறைகள் சிறப்பாக செயல்பட்டதால், ஏற்றுமதி, 25.28 சதவிகிதம் உயர்ந்து 2 லட்சத்து 58 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது. இதே காலத்தில் நாட்டின் இறக்குமதியும் 23.54 சதவிகிதம் உயர்ந்து, 3 லட்சத்து 89 ஆயிரத்து 475 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

ஏற்றுமதி - இறக்குமதி வர்த்தகத்திற்கு இடையிலான வித்தியாசமே வர்த்தகப் பற்றாக்குறை என்ற வகையில், 2022 ஜனவரியில் ஏற்றுமதியை விட இறக்குமதி உயர்ந்ததால் வர்த்தகப் பற்றாக்குறை, 1 லட்சத்து 30 ஆயிரத்து 650 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஒட்டுமொத்தமாக 2021 - 22 நிதியாண்டில், ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான 10 மாத காலத்தில், ஏற்றுமதி 46.73 சதவிகிதம் உயர்ந்து, 25 லட்சத்து 19 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. கடந்த 2020-21 நிதியாண்டின் இதே 10 மாத காலத்தில், ஏற்றுமதி மதிப்பு 17 லட்சத்து 16 ஆயிரத்து 900 கோடி ரூபாயாகவே இருந்த நிலையில், இது கடந்த ஆண்டை விட 8 லட்சம் கோடி ரூபாய் அதிகமாகும்.  இறக்குமதியும், 2021-22 நிதியாண்டின் 10 மாத காலத்தில், 62.65 சதவிகிதம் உயர்ந்து, 37 லட்சத்து 18 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதனால் வர்த்தகப் பற்றாக்குறை, கடந்தாண்டை விட இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. 2020-21 நிதியாண்டின்  ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான 10 மாத காலத்தில் 5 லட்சத்து 69 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்த வர்த்தகப் பற்றாக்குறை, 2021-22 நிதியாண்டின் 10 மாத காலத்தில் 11 லட்சத்து 99 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது 2021 டிசம்பர் மாதத்தில், சுமார் 10 லட்சத்து 54 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்ததும் குறிப்பிடத்தக்கது.