states

தீக்கதிர் விரைவு செய்திகள்

பாஜக ஆளும் ம.பி.,யில் அடாவடி தலித் இளைஞர்  காவல் நிலையத்தில் அடித்துக் கொலை

பாஜக ஆளும் மத்தியப் பிரதேச மாநிலம் தேவாஸ் மாவட்டத்தைச் சேர்ந்தவர் முகேஷ் லாங்ரே. தலித் சமூகத்தைச் சேர்ந்தவரான இவர் மீது உள்ளூர் பகுதியில் நிகழ்ந்த சிறிய பிரச்சனை தொடர்பாக பெண் ஒருவர் டிசம்பர் 26ஆம் தேதி புகார் அளித்துள்ளார்.  கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் சென்ற முகேஷ் லாங்ரே விடம் போலீசார்,”நடவடிக்கை எடுக்கா மல் இருக்க லஞ்சம் கொடுக்க வேண்டும்” என மிரட்டியுள்ளனர். ஆனால் முகேஷ் லாங்ரே,”நான் எந்த தவறும் செய்யவில்லை ; அதனால் பணம் தர மாட்டேன்” என கூறியுள்ளார். அடுத்த 2 நாட்களில்  முகேஷ் லாங்ரே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக குடும்பத்தினரிடம் போலீசார் கூறி யுள்ளனர்.  மேலும் தேவாஸ் மாவட்டகாவல் கண்காணிப்பாளர் புனித் கஹ்லோட் குடும்பத்தினரிடம்,”இன்ஸ்பெக்டர் அறிக்கையைப் படித்துக் கொண்டி ருந்தபோது, ​​முகேஷ் தனது கையில் இருந்த டவலைப் பயன்படுத்தி லாக்- அப்பின் ஜன்னல் கம்பியில் தொங்கி னார். அவர் மருத்துவமனைக்கு கொண்டு  செல்லப்பட்டபோதும் அவர் உயிரி ழந்தார்” எனக் கூறினார்.  ஆனால் போலி வழக்கு மற்றும் பணம் கொடுக்காததால் போலீசார் அடித்து கொன்றதாக தலித் இளைஞர் முகேஷ் லாங்ரேவின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். காவல்நிலையத்தில் உள்ள போலீசார் அனைவரையும் சஸ்பெண்ட் செய்யும் வரை பிரேத பரி சோதனை செய்ய சம்மதிக்க மாட்டோம் என முகேஷ் லாங்ரேவின் குடும்பத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெளியுறவு அமைச்சர்  எஸ்.ஜெய்சங்கர் கத்தார் பயணம்

தோகா/புதுதில்லி,டிச.30- இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் டிசம்பர் 30 முதல் ஜனவரி 1 வரை கத்தாருக்கு அதிகாரப்பூர்வ பயணத்தை மேற்கொள்வதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த மூன்று நாள் பயணத்தின் போது ஜெய்சங்கர் கத்தார் பிரதமர் மற்றும் வெளியுறவு அமைச்சர் ஷேக் முகமது பின் அப்துல்ரஹ் மான் பின் ஜாசிம் அல் தானியை சந்தித்து வர்த்தகம், முதலீடு, எரிசக்தி மற்றும் பாதுகாப்புத் துறைகளில் இருதரப்பு உறவுகள் குறித்து பேச உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2024 இல் மட்டும் ஜெய்சங்கர் 5 முறைக்கு மேலாக கத்தார் சென்றுள்ளார். கடந்த அக்டோபர் மாத இறுதியில், இருநாடுகளும் ஐந்தாவது முறையாக  வெளியுற வுத்துறை ஒத்துழைப்பு குறித்து ஆலோசனைகளை நடத்தின.   புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, நிதித்துறையில் தொழில்நுட்பப் பயன்பாடுகள் உதவி உள்ளிட்ட வற்றில் இரு நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை மேலும் அதிகரிப்பதற்கான பேச்சுவார்த்தை நடந்தது. இந்த சந்திப்புகளின் மட்டுமின்றி செப்டம்பர் 9 அன்று சவூதி அரேபியாவிற்கு சென்ற போதும் கத்தார் பிரதமர் முகமது பின் அப்துல்ரஹ்மான் அல் தானியை சந்தித்து ஜெய்சங்கர் பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கல்லூரி மாணவியை ரயிலில் தள்ளிவிட்டு கொலை செய்தவருக்கு மரண தண்டனை சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு!

சென்னை, டிச. 30 - கல்லூரி மாணவியை ரயில் முன்பு தள்ளிவிட்டு கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது. சென்னையை அடுத்த ஆலந்தூர் காவலர் குடியிருப்பைச் சேர்ந்தவர் மாணிக்கம். சொந்தமாக கார் வைத்து வாடகைக்கு ஓட்டி வந்தார். இவரது மனைவி ராமலட்சுமி, ஆதம்பாக்கம் காவல் நிலை யத்தில் ஏட்டாகப் பணியாற்றினார். இத்தம்பதியின் மூத்த மகள் சத்யா(20), தியாகராய நகரில் உள்ள தனியார் கல்லூரி யில் பிசிஏ 3-ஆம் ஆண்டு படித்து வந்தார்.  இவர், அதே பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளர் தயாளனின் மகன்  சதீஷ் (31) என்பவரைக் காதலித்து வந்தார். இந்நிலையில், பெற்றோர் கண்டித்ததால் சத்யா, திடீரென்று காதலை கைவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த சதீஷ், கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் 13 அன்று கல்லூரி செல்வதற்காக பரங்கிமலை ரயில் நிலையத்தில் காத்திருந்த சத்யாவை, அந்த வழியாக வந்த ரயில் முன்பு தள்ளி படுகொலை செய்தார். இதுதொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி சதீஷை கைது செய்து, அவர் மீது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்த வழக்கு விசாரணை சென்னை அல்லிகுளத்தில் உள்ள மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஸ்ரீதேவி முன்னிலையில் நடந்தது. 70 பேரிடம் விசாரணை போலீசார் தரப்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் ரவீந்திரநாத் ஜெயபால் ஆஜராகி, ‘சதீஷ் மீதான குற்றச்சாட்டு கடுமை யானது. அவருக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும்’ என வாதாடினார். அரசு தரப்பு சாட்சிகள் 70 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அனைத்து தரப்பு விசாரணையும் முடிவடைந்த நிலையில், டிசம்பர் 28  அன்று நீதிமன்றத்தில் சதீஷ் ஆஜர்படுத்தப் பட்டார். அப்போது நீதிபதி பிறப்பித்த உத்தர வில், ‘‘தமிழ்நாடு பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் இந்திய தண்டனை சட்டப்பிரிவு 302 (கொலை) ஆகியவற்றின் கீழ் சதீஷ் மீதான குற்றச்சாட்டு நிரூபணமாகி உள்ளது. எனவே, அவரை குற்றவாளி என  அறிவிக்கிறேன். தண்டனை விவரம் டிசம்பர்  30 அன்று அறிவிக்கப்படும்; அன்றைய தினம் சதீஷை மீண்டும் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்த வேண்டும்’’ என்று கூறியிருந்தார். அதன்படி, திங்களன்று (டிச.30) நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட குற்ற வாளிக்கு மரண தண்டனையை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

பல்கலை. மாணவிக்கு பாலியல் வன்கொடுமை ஞானசேகரனை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனு

சென்னை, டிச. 30 - சென்னை கிண்டியிலுள்ள அண்ணா பல்கலைக்கழக மாணவி, பல்கலைக்கழக வளாகத்திற்கு உள்ளேயே பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில், மாணவி கொடுத்த புகாரின் பேரில் 4 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவுசெய்த போலீசார் ஞானசேகரன் (37) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஏற்கெனவே 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், சட்டவிரோதமாக ஒருவரை தடுத்து வைத்தல், தொழில்நுட்ப சட்டம் உள்ளிட்ட மேலும் 4 பிரிவுகளின் கீழ் ஞானசேகரன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதான ஞானசேகரனை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சைதாப்பேட்டை கோர்ட்டில் போலீசார் மனுதாக்கல் செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாடப்புத்தகத்தில் நல்லகண்ணு வாழ்க்கை வரலாறு விஜய் சேதுபதி கோரிக்கைக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பதில்!

சென்னை, டிச. 30 - இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் வாழ்க்கை வரலாற்றை பாடப்புத்தகத்தில் இணைக்க வேண்டும் என்று நடிகர் விஜய் சேதுபதி வைத்த கோரிக்கைக்கு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பதில் அளித்துள்ளார்.இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணுவின் நூற்றாண்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய நடிகர் விஜய் சேதுபதி, நல்லகண்ணுவின் வாழ்க்கை வரலாற்றைப் பள்ளி பாடப்புத்தகங்களில்  இடம்பெற செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தார். விஜய் சேதுபதியின் கோரிக்கைக்கு, பதிலளிக்கும் வகையில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ், “நல்லகண்ணுவின் வாழ்க்கை குறிப்பை பாடப்புத்தகத்தில் இணைப்பது குறித்து முதல்வரின் ஆலோசனையைப் பெற்று முடிவு செய்யப்படும்” என்று தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அன்பில் மகேஸ், தன்னுடைய ‘எக்ஸ்’ பக்கத்திலும் பதிவிட்டுள்ளார். அதில், “விடுதலைப் போராட்ட வீரர் போற்றுதலுக்குரிய நல்லகண்ணுவின் வாழ்க்கை வரலாற்றை பள்ளி மாணவர்கள் அறிந்து கொள்ளும் நோக்கில், பாடப்புத்தகத்தில் இணைப்பது குறித்து முதல்வர் ஸ்டாலினின் ஆலோசனையைப் பெற்று முடிவு செய்யப்படும்” என்று குறிப்பிட்டுள்ளார்.