புதுதில்லி, மார்ச் 18 - நாடு முழுவதும் உள்ள ஒன்றிய அரசின் அலுவலகங்களில் 8 லட்சத்து 72 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக இருப்பதாக நாடாளுமன்றத்தில் ஒன்றிய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசுத் துறைகளில் உள்ள காலியிடங்கள் தொடர்பாக, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியிருந்த நிலையில், அவற்றுக்கு ஒன்றிய அமைச்சர்கள் பதிலளித்துள்ளனர். இதில், மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ஒன்றிய பணியாளர் நலத்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங், “1.3.2020 நிலவரப்படி ஒன்றிய அரசின் 77 துறைகளில் 40 லட்சத்து 4 ஆயிரத்து 941 பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டு உள்ளன. இதில் 31 லட்சத்து 33 ஆயிரத்து 658 பேர் பணியாற்றுகின்றனர். 8 லட்சத்து 71 ஆயிரத்து 283 பணியிடங்கள் காலியாக உள்ளன’’ என தெரிவித்துள்ளார். “ரயில்வே துறையில் மட்டும் 2 லட்சத்து 98 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றில் 1.40 லட்சம் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். பட்டியல் வகுப்பினர் - பழங்குடியினர் பிரிவினருக்கான பணியிடங்களை நிரப்புவதற்காக சிறப்பு ஆட்சேர்ப்பு முகாம் நடத்தப்படுமா? என்ற கேள்விக்கு ஒட்டுமொத்தமாகவே “ரயில்வே ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்பட்டு வருவதால், பட்டியல் - பழங்குடி வகுப்பினருக்கு சிறப்பு ஆட்சேர்ப்பு முகாம் தேவையில்லை” என்றும் அஸ்வினி வைஷ்ணவ் பதிலளித்துள்ளார். நாடு முழுவதும் ஒன்றிய அரசின் இந்திய தொழில்நுட்பக் கழகங்களில்கா (Indian Institute Of Technolog - IIT) லியாக உள்ள பணியிடங்கள் தொடர்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு கல்வித்துறை இணையமைச்சர்
சுபாஷ் சர்க்கார் எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார். அதில், “நாடு முழுவதும் பல்வேறு ஐஐடி-களில் 4 ஆயிரத்து 300-க்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கின்றன” என்று அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். இதில் “அதிகபட்சமாக காரக்பூர் ஐஐடி-யில் 815 காலியிடங்கள், மும்பை ஐஐடி-யில் 532 இடங்கள், தன்பாத் ஐஐடி-யில் 447 இடங்கள், சென்னை ஐஐடி-யில் 396 இடங்கள், கான்பூர் ஐஐடி-யில் 351 இடங்கள், ரூர்க்கி ஐஐடி-யில் 296 இடங்கள் காலியாக உள்ளன” என்று தெரிவித்துள்ளார். இந்த பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் நிரப்புமாறு அனைத்து ஐஐடி-களையும் ஒன்றிய அரசு கேட்டுக்கொண்டிருப்பதாக கூறியிருக்கும் சர்க்கார், இந்த பணியமர்த்தல் நடவடிக்கையில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய உயர்சாதியினருக்கான 10 சதவிகித இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த இட ஒதுக்கீடு பொதுப்பிரிவு, எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. ஆகிய பிரிவுகளின் இட ஒதுக்கீடு உரிமை பாதிக்காத வண்ணம், மாணவர் எண்ணிக்கையை 25 சதவிகிதம் அதிகரித்து செயல்படுத்தப்பட்டு உள்ளது; இதனால் ஆசிரியர்களின் தேவையும் அதிகரித்துள்ளதால், பணியிடங்களை நிரப்புவதற்கு நேரம் எடுக்கும் நிலை உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார். மற்றொரு கேள்விக்கு, காஷ்மீர், ஆந்திரா, பீகார், ஒடிசா ஆகிய 4 மாநிலங்களில் தலா ஒரு மத்திய பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் பணியிடம் காலியாக இருப்பதாகவும், இந்த காலியிடங்களை நிரப்புவது ஆண்டு முழுவதும் நடைபெறும் ஒரு தொடர் நடவடிக்கை எனவும் சுபாஷ் சர்க்கார் கூறியுள்ளார்.