புவி வெப்ப உயர்வால் 2021இல் சைபீரியாவில் இருந்து மேற்கு அமெரிக்கா வரை முன்பு ஒருபோதும் இல்லாத அளவிற்கு காட்டுத்தீ மூலம் கார்பன் உமிழ்வு நிகழ்ந்துள்ளது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இவ்வாறு வெளியேற்றப்பட்ட கார்பனின் அளவு 1.76 பில்லியன் டன்கள் என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் கோபர்நிகஸ் வளிமண்டலக் கண்காணிப்பு மையம் (Copernicus Atmosphere Monitoring service) கூறியுள்லது. சைபீரியா, அமெரிக்கா, துருக்கி, கிரீஸ்போன்ற நாடுகளில் 2021இல் காட்டுத்தீ நிகழ்வுகள் அதிகம் நடந்துள்லன. இந்நிகழ்வுகளில் தீப்பிழம்புகள் தீவிரமாக எரிந்ததுடன் புவி வெப்பநிலை அதிகரிப்பின் காரணமாக தொடர்ந்தும் நீண்டகாலம் எரிந்து பெரும் நாசத்தை ஏற்படுத்தின என்று இந்த மையத்தின் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இது ஜெர்மனி ஆண்டுதோறும் வெளியிடும் கார்பனின் அளவை விட இரண்டு மடங்கிற்கும் கூடுதலாக இருந்தது. இந்த இடங்கள் வழக்கமாக காட்டுத்தீ ஏற்படும் இடங்கள் என்றாலும் இம்முறை மிக அதிக கார்பன் உமிழ்வு நிகழ்ந்துள்ளது. வழக்கமாக இந்த இடங்களில் காட்டுத்தீ ஜனவரி நவம்பர் காலத்தில் நிகழும் என்றாலும் 2003இல் கோபர்நிகஸ் மையம் தொடங்கப்பட்டதில் இருந்து 2021ல் காட்டுத்தீ இப்பகுதிகளில் மிக அதிக அளவில் ஏற்பட்டுள்ளது. சைபீரியாவின் யுக்குஷா (Yukutia) பிரதேசம், டுனீஷியா, துருக்கி, அமெரிக்கா ஆகிய இடங்களில் நிகழ்ந்த காட்டுத்தீ நீண்டகாலம் தீவிரமாக எரிந்தது. அதிக வெப்பம் காரணமாக இந்த இடங்கள் வறண்டு காய்ந்து போயிருந்ததால் எரிந்த ஜுவாலைகள் வெப்பம் மிகுந்ததாக இருந்தன. இதனால் இத்தீ அருகாமை செடிகொடிமரங்கள் இருந்தபகுதிகளுக்கும் சுலபமாகப் பரவியது. இது அழிவை அதிகமாக்கியது என்று கோபர்நிகஸ் மையத்தின் மூத்த விஞ்ஞானி மார்க் பாரிங்டன் (Mark Parrington) கூறுகிறார். 2021இல் காட்டுத்தீ நிகழ்வுகள் உலகளவில் முந்தைய ஆண்டுகளை விட அதிகமாக ஏற்பட்டுள்லன. ஆனால் இத்தகைய சம்பவங்களின் எண்ணிக்கை காலநிலை மாற்றத்தின் காரணமாக வரும் ஆண்டுகளில் இன்னும் அதிகமாக நடைபெறும் என்று கோபர்நிகஸ் விஞ்ஞானிகள் கருதுகின்றனர். மேற்கு சைபீரியாவில் காட்டுத்தீ மூலம் வெளியேறிய கார்பன் டை ஆக்சைடின் அன்றாட உமிழ்வு 2003-2021 சராசரியை விட அதிகமாக இருந்தது.
வட அமெரிக்கா, கனடா, கலிபோர்னியா, அமெரிக்காவின் கடலோர வடமேற்கு பசுபிக் பகுதிகளில் ஏற்பட்ட காட்டுத்தீயால் 83 மில்லியன் டன் கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றப்பட்டது. இதனால் உருவான பெரும்புகை அட்லாண்டிக் வழியாக ஐரோப்பா வரை பரவியது. கலிபோர்னியாவின் டிக்சி காட்டுத்தீ (Dixie fire) ஒரு மில்லியன் ஏக்கர் பரப்பளவில் இருந்த செழுமையான நிலத்தை அழித்தது. இதுவே அமெரிக்காவின் வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட மிகப்பெரிய காட்டுத்தீ. வறண்ட வெப்பம் மிகுந்த கோடைகாலம் கிரீஸ், துருக்கி ஆகிய நாடுகளில் தீவிர காட்டுத்தீயை ஏற்படுத்தியது. நாட்கணக்கில் எரிந்த தீயால் ஆயிரக்கணக்கான மக்கள் அவரவர்களின் வீடுகளில் இருந்து பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயரச் செய்யப்பட்டனர். பெரும் பொருள் இழப்புகளை ஏர்படுத்தியதுடன் இந்தத் தீ அந்தப் பிரதேசங்களில் காற்றின் தரத்தை மோசமாகப் பாதித்தது. இதனால் காற்றில் கலந்த ஆபத்தான நுண் துகள்கள் அங்கு வாழும் மக்களின் உடல் நலனை வெகுவாகப் பாதித்து வருகிறது என்று கோபர்நிகஸ் ஆய்வாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். காலநிலை மாற்றத்தின் தீவிரத்தைக் குறைத்து எரியும் பூமியை குளிரச்செய்யாவிட்டால் நாளை மனிதனும் உலகில் ஏதோ ஒரு மூலையில் புதைபடிவமாக (fossil)மாறும் நிலை ஏற்படும்.