states

கற்பனைக்கும் எட்டாத நிபந்தனைகள்

பாக். பிரதமர் புலம்பல் இஸ்லாமாபாத், பிப்.3- பாகிஸ்தானின் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்காக ஐ.எம்.எப். (சர்வதேச நிதியம்) போடும் நிபந்தனைகள் கற்பனைக்கும் எட்டாதவையாக இருக்கின்றன என்று அந்நாட்டின் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் திணறி வருகிறது. வெறும் 310 கோடி அமெரிக்க டாலர் மட்டும்தான் அந்நிய செலாவணியாகக் கைவசம் இருக்கிறது என்று பாகிஸ்தானின் மத்திய வங்கி கூறியுள்ளது. கடந்த 48 ஆண்டுகளில் இல்லாத பணவீக்கத்தை சந்தித்து வருகிறது. அடிப்படையான உணவுப் பொருட்களை வாங்க இயலாத அளவுக்கு விலைகள் அதிகரித்துள்ளன.  2019-ஆம் ஆண்டில் 600 கோடி அமெரிக்க டாலர் கடனை ஐ.எம்.எப். பாகிஸ்தானுக்குத் தந்தது. கடந்த ஆண்டில் மேலும் 100 கோடி அமெரிக்க டாலரை வாங்கினார்கள். தற்போது 250 கோடி அமெரிக்க டாலர் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள். இதுகுறித்து விவாதிக்க ஐ.எம்.எப். குழு ஒன்று பாகிஸ்தானுக்கு வந்துள்ளது. பேச்சுவார்த்தையின்போதுதான் ஐ.எம்.எப். குழு போட்ட நிபந்தனைகளைப் பார்த்து பாகிஸ்தான் அரசு அதிர்ந்து போயிருக்கிறது. இந்த நிபந்தனைகள் குறித்துக் கருத்து தெரிவித்த பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், ‘‘கற்பனைக்கும் எட்டாத நிபந்தனைகளைப் போட்டிருக்கிறார்கள். அந்த விபரங்களுக்குள் நான் போக விரும்பவில்லை. அந்த நிபந்தனைகள் கற்பனைக்கும் எட்டாதவை என்பதற்காக அவற்றை ஏற்றுக் கொள்ள முடியாது என்று சொல்வதற்கில்லை. நமக்கு வேறு வழியில்லை. ஏற்றுக் கொண்டேயாக வேண்டும்’’ என்றார்.