states

தீக்கதிர் விரைவு செய்திகள்

விபத்து நடந்த வழித்தடத்தில் ரயில் சேவை துவங்கியது

ஒடிசா மாநிலத்தின் பாலசோர் மாவட்டம், பகானகா பகுதியில் ஜூன் 2 அன்று  இரவு 7.20 மணிக்கு நிகழ்ந்த கோர விபத்திற்குப் பின், அந்த வழித்தடத்தில்  ரயில் சேவை நிறுத்தப்பட்டு இருந்தது. தண்டவாளத்தில் கிடந்த ரயில் பெட்டிகளை அகற்றி, 7 பொக்லைன் இயந்திரங்கள் மூலம் பாதைகளைச் சீரமைக்கும் பணியில், தொழி லாளர்கள் இரவு - பகலாக ஈடுபட்டு வந்தனர். இதில் 4 வழித்தடங்களில், 2 வழித்தடங்களில் சீரமைப்புப் பணிகள் முடிவடைந்த நிலையில், 51 மணிநேரத்திற்குப் பிறகு, ஞாயிற்றுக்கிழமை இரவு 11.30 மணிக்கு ரயில் சேவை தொடங்கியது. முதலாவ தாக சரக்கு ரயில் இயக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து திங்களன்று (ஜூன் 5) காலை பயணிகள் ரயில் மிகவும் மெதுவாக இயக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது.

கையெடுத்துக் கும்பிட்ட அஸ்வினி வைஷ்ணவ்!

ரயில் விபத்து ஏற்பட்ட பகானகா பகுதியில் 51 மணி நேரத்திற்குப் பிறகு, 2 வழித்தடங்களில் ரயில் சேவை துவங்கியது. முதலில் சரக்கு ரயிலும், பின்னர்,  ‘ஹவுரா - பூரி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்’ ரயிலும் இயக்கப்பட்டன. ‘ஹவுரா - பூரி  வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்’, விபத்துப் பகுதியை குறைந்த வேகத்தில் கடந்து சென்றது.  முன்னதாக ஞாயிறன்று இரவு ரயில்சேவையை கையசைத்துத் துவக்கி வைத்த ரயில்வே  அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், முதல் ரயில் அந்த வழியாகச் செல்லும்போது (நல்லவேளை பதவி இன்னும் பறிபோகவில்லை என்று நினைத்தாரோ என்னவோ..) ரயிலைப் பார்த்துக் கும்பிட்டு வணங்கினார். 

சிக்னல்கள் செயல்படுவதை உறுதி செய்ய உத்தரவு

ரயில்வே சிக்னல் கருவிகள் முறையாக செயல்படுகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும் என அனைத்து மண்டல மேலாளர்களுக்கும் இந்திய ரயில்வே  வாரியம் கடிதம் எழுதி உள்ளது. பிரச்சனைகள் ஏதேனும் இருந்தால் விவரங்களை உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும்; டபுள் லாக்கிங் உள்ளிட்ட மற்ற உபகரணங்களை பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கோரமண்டல் ரயில் விபத்தை தொடர்ந்து ரயில்வே வாரியம்  இந்த அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

ஒடிசாவிலிருந்து 2ஆவது சிறப்பு ரயில் சென்னை வந்தது

கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் ஒடிசா அருகே தடம்புரண்டு விபத்துக்கு உள்ளானது. இதில், சிக்கிக் கொண்ட தமிழகத்தைச் சேர்ந்த பயணிகள், சிறப்பு ரயில்கள் மூலம் சென்னை அழைத்து வரப்பட்டனர். இதில்,  முதல் சிறப்பு ரயில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.40 மணிக்கு ஒடிசாவில் இருந்து  சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தது. இதில் தமிழ்நாட்டு  பயணிகள் 137 பேர் இருந்தனர். இந்நிலையில், ஒடிசாவின் பத்ராக் ரயில் நிலையத்திலிருந்து, ஞாயிறன்று பகல் கிளம்பிய 2-வது சிறப்பு ரயில், திங்களன்று சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தடைந்தது. இதில் 17 பேர் மட்டுமே சென்னை திரும்பியுள்ளனர். சென்னை திரும்பியவர்களில் யாரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் இல்லை எனவும், அவர்கள் சென்னைக்கு வந்து வேலை செய்பவர்கள் என கூறப்படுகிறது.

இதுவரை 151 உடல்கள் மட்டுமே அடையாளம் தெரிந்துள்ளது

ஒடிசா ரயில் விபத்தில் பலியான 275 பேர்களில், இதுவரை 151 பேர் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஒடிசா தலைமைச் செயலாளர் பிரதீப் ஜெனா டுவிட்டரில் தெரிவித்துள்ளார். “ஒடிசா ரயில் விபத்தில் இறந்தவர்களில் இதுவரை 151 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இன்னும் 124 சடலங்கள் அடையாளம் காணப்படவில்லை. உரிய செயல்முறைக்குப் பிறகு அனைத்து உடல்களும் சம்பந்தப்பட்டவர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. உடல்கள் சம்பந்தப்பட்ட இடத்திற்கு கொண்டு செல்வதற்கான போக்குவரத்து செலவை ஒடிசா அரசே ஏற்கும்” என்று அவர் கூறியுள்ளார்.

மேற்குவங்கத்தைச் சேர்ந்தவர்கள் 81 பேர் பலி!

ஒடிசா ரயில் விபத்தில் பலியானோரில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்கள் 61 பேர் என்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி ஞாயிற்றுக்கிழமையன்று மாலை அறிவித்திருந்தார். இந்நிலையில், திங்களன்று காலை நிலவரப்படி இந்த எண்ணிக்கை 81 ஆக அதிகரித்துள்ளது. இது மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் அச்சம் எழுந்துள்ளது. அதிகபட்சமாக தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தைச் சேர்ந்த வர்கள் மட்டும் 31 பேர் பலியாகி இருப்பதாக கூறப்படுகிறது.

விபத்தில் 3 மகன்களையும் இழந்த தாயின் சோகம்

ஒடிசா ரயில் விபத்தில் மேற்குவங்கத்தைச் சேர்ந்தவர்கள் அதிகமான எண்ணிக்கையில் உயிரிழந்துள்ளனர். இவர்களில் மேற்குவங்க மாநிலம் தெற்கு 24-பர்கனாஸ் பகுதியைச் சேர்ந்த ஹரன்(47), நிஷிகந்தா (45), தீவாகர் (41) ஆகியோரும் அடங்குவர். ஆந்திர மாநிலத்திற்கு புலம்பெயர் தொழிலாளர்களாகச் செல்லும் வழியில்தான், இவர்கள் விபத்தில் சிக்கி, பரிதாபகரமான முறையில் உயிரை  விட்டுள்ளனர். இதனால், பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ள இவர்களின் தாயார் சுபத்ரா  கயன், தனது மருமகள்கள், பேரன்- பேத்திகள் என்ற மொத்தம் 12 பேரை எப்படி காப்பாற்றுவது என தெரியாமல் நிர்க்கதியாக நிற்கிறார்.

கல்விச்செலவை ஏற்குமாம் அதானி குழுமம்

ஒடிசா ரயில் விபத்தில், பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்விச் செலவை  அதானி குழுமம் ஏற்றுக்கொள்ளும் என்று அதன் தலைவர் கவுதம் அதானி அறிவித்துள்ளார். “ஒடிசா ரயில் விபத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்வி செலவுக்கான பொறுப்பை ஏற்க எங்களுடைய குழுமம் முடிவு செய்து உள்ளது.  இந்த விபத்து செய்தி தன்னை மனதளவில் ஆழமாக பாதித்து உள்ளது. பாதிக்கப்பட்ட வர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு வலிமையை வழங்க வேண்டியதும், அவர்களின் குழந்தைகளின் வருங்காலம் சிறக்க செய்ய வேண்டியதும் நம் அனைவரின் கூட்டு பொறுப்பு” என்று அதானி தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக, புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக்கும், குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்பதாக அறிவித்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

இண்டர்லாக்கிங்-கில் கோளாறு ஏற்பட வாய்ப்பில்லை

இண்டர்லாக்கிங்-கில் ஏற்பட்ட பிரச்சனையே ரயில் விபத்துக்கு மூலகாரணம் என்று அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்திருக்கும் நிலையில், ‘‘இண்டர்லாக்கிங் தொழில்நுட்பம் மிகவும் பாதுகாப்பானது. இது செயற்கை நுண்ணறிவு போன்ற தொழில்நுட்பம். தண்டவாள பாயிண்ட் இயந்திரத்தை வெளிநபர்கள் யாராவது சேதப்படுத்தினால் தவிர, இதில் கோளாறு ஏற்பட வாய்ப்பு இல்லை’’ என்று ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விபத்துக்கு பொறுப்பேற்காமல் மோடி அரசு ஒளியக்கூடாது

ஒடிசா ரயில் விபத்திற்கு மோடி அரசுதான் பொறுப்பேற்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். “ஒடிசா ரயில் விபத்தில் 270-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இருப்பினும், இதுவரை இதற்கு  யாரும் பொறுப்பு ஏற்கவில்லை. இத்தகைய வேதனையான விபத்துக்குப் பொறுப்பேற்காமல் மோடி அரசு எங்கும் ஓடிவிட முடியாது. உடனடியாக ரயில்வே அமைச்சரை ராஜினாமா செய்யப் பிரதமர் வலியுறுத்த வேண்டும்” என்று ராகுல் காந்தி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

பிப்ரவரி மாதமே எச்சரித்தும் மோடி அரசு அலட்சியம்?

எலக்ட்ரானிக் சிக்னல் இண்டர்லாக்கில் குறைபாடு இருப்பதை கடந்த பிப்ரவரி மாதமே ரயில்வே அமைச்சக அதிகாரிகள் சுட்டிக்காட்டிய போதும், உரிய   நடவடிக்கை எடுக்காதது ஏன்? என காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேரா கேள்வி  எழுப்பியுள்ளார். மேலும், ஒடிசா ரயில் விபத்திற்கு மின்னணு சிக்னல் இண்டர்லாக்கின்  மாற்றமே காரணம் என்று ரயில்வே அமைச்சர் கூறுவதால் விபத்திற்கு பிரதமர் மோடி பொறுப்பேற்றுக் கொள்வாரா? என்றும் பவன் கேரா கேட்டுள்ளார். சிறிய  ரயில் நிலையத்தில் கூட கொடியுடன் இருக்கும் பிரதமர் மோடி, சுய விளம்பரத்திற்காகவே கேமிராக்கள் புடைசூழ ஒடிசா சென்றதாகவும் பவன் கேரா விமர்சித்துள்ளார்.

மீண்டும் மஞ்சப்பை: முதல்வர் அறிவுரை

சென்னை, ஜூன் 5- மீண்டும் மஞ்சப்பை இயக்கத்தில் மக்கள் அக்கறையுடன் பங்கேற்க வேண்டும் என முதல்வர் மு.க. ஸ்டா லின் வேண்டுகோள் விடுத்துள்ளார். அளவற்ற தேவையற்ற நெகிழிப் பயன்பாட்டை எதிர்த்து நாம் துவங்கிய இயக்கம் “மீண்டும் மஞ்சப்பை”. இந்த ஆண்டுக்கான உலக சுற்றுச்சூழல் தினத்தின் மையக்  கருவாக நெகிழி மாசு ஒழிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மக்காத் தன்மையுடைய பிளாஸ்டிக் கழிவு களை முறையாக பிரித்துப் போட  வேண்டும் என ஸ்டாலின் கூறியுள்ளார்.

சிறந்த பல்கலைக்கழகமாக விஐடி  தேர்வு!

சென்னை, ஜூன் 5- சிறந்த பல்கலைக்கழகத்துக்கான பட்டியலில் தமிழ்நாட்டின் 2 நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. ஒன்றிய கல்வி அமைச்சகம் 2023-ஆம் ஆண்டின் சிறந்த பல்கலைக் கழகத்துக்கான என்.ஐ.ஆர்.எஃப்.  தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள் ளது. இதில், கோவை அமிர்தா பல்கலைக்கழகம் 7-ஆம் இடமும், வேலூர் விஐடி பல்கலைக்கழகம் 8-ஆம் இடம் பெற்றுள்ளது. இந்திய அறிவியல் நிறுவனம், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், ஜாமியா மிலியா பல்கலைக் கழகம்  முறையே முதல் மூன்று இடங்களை பெற்றுள்ளன.

500 டாஸ்மாக் கடைகள் விரைவில் மூடல்

சென்னை, ஜூன் 5- தமிழ்நாட்டில் 500 டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூடுவது குறித்து விரைவில் அறிவிப்பு வெளி யிடப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 5,329 மதுக்கடைகளில் 500 கடைகள் மூடப்படும் என சட்டப்பேரவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு வெளியிட்டார். இந்த நிலையில், 500 கடைகளை இறுதி செய்யும் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளது. பட்டியல் தயார் செய்யப் பட்டு வருகிறது. ஒரு வாரத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளி யிடப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி  கூறினார். அவர் மேலும் கூறுகையில், “டாஸ்மாக் மதுபான கடைகளில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்துவதற் கான விரிவான திட்ட அறிக்கை தயார்  செய்யப்பட்டு வருகிறது. மாநிலம் முழுவதும் பாதுகாப்புக்காக டாஸ்மாக்  மதுபான கடைகளில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்த முடிவு செய்யப் பட்டுள்ளது. விரைவில் அதற்கான பணி கள் தொடங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

சென்னை ஐஐடி முதலிடம் 

சென்னை, ஜூன் 5- சிறந்த கல்வி நிறுவனத்துக்கான பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடம் பிடித்துள்ளது. ஒன்றிய அரசின் கல்வி அமைச்ச கம் 2023-ஆம் ஆண்டின் சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான என்.ஐ.ஆர்.எஃப். தரவரிசைப் பட்டியலை வெளி யிட்டுள்ளது. இதில், சென்னை ஐஐடி  முதலிடமும், இந்திய அறிவியல் நிறுவ னம் பெங்களூரு இரண்டாமிடமும், தில்லி ஐஐடி மூன்றாமிடமும் பெற்றுள்ளது. ஐஐடி மும்பை, ஐஐடி கான்பூர், எய்ம்ஸ் தில்லி, ஐஐடி கராக்பூர், ஐஐடி ரூர்க்கி, ஐஐடி குவஹாட்டி, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் முறையே முதல் பத்து இடங்களை பெற்றுள்ளது.