நாகர்கோவில், நவ. 5- சிஐடியு மாநில மாநாட்டு கொடியை வெள்ளியன்று (நவ.4) ஏற்றிவைத்து சிஐடியு மூத்த தலைவர் டி.கே.ரங்கராஜன் நிகழ்த்திய கொடி உரை : ஊடகம் உட்பட பல துறைகளில் எதிரி வர்க்கம் மிக மிக வலுவாக உள்ளது. முதலாளித்துவம் அதன் ஆட்சியை உலகம் முழுவதும் நிலைநாட்ட தனியார் மயத்தை பயன்படுத்துகிறது. உலக வர்த்தக அமைப்பு, உலக வங்கி, நிதி மூலதனத்தின் மூலமாக அவர்களது ஆதிக்கத்தை நிலைநிறுத்த பயன்படுத்தி வருகிறார்கள். சந்தைப் பொருளாதாரம் மக்களை கொஞ்சம் கொஞ்சமாக சந்தைக்குள் நுழைக்கிறது. சந்தைதான் எதையும் தீர்மானிக்க முடியுமே தவிர அரசு தீர்மானிக்க முடியாது. ஏற்கனவே நிலத்தின் விலை, நில வரி உயர்ந்திருக்கிறது. பால் விலை கடுமையாக உயர்ந்திருக்கிறது. அரிசி, பருப்பு என எல்லா விலைகளும் உயர்ந்திருக்கிறது.
பிரதமரும் நிதி அமைச்சரும் நமது நாட்டில் பாதிப்பு இல்லை என்கிறார்கள். அப்படியானால் ஏன் வட்டி விகிதத்தை அதிகரிக்கிறார்கள். விலைவாசி உயர்வதும், வட்டிவிகிதம் உயர்வதுமாக பொருளாதாரத்தில் ஒரு கடுமையான தேக்கத்தை இந்த உலகம் சந்தித்துக்கொண்டிருக்கிறது. பொருளாதாரத்தில் தேக்கம் என்று சொன்னால், மக்களிடம் வாங்கும் சக்தி குறையும் என்று பொருள். உங்களிடம் வரும் காசின் அளவு குறைகிறது என்று பொருள். வேலையில்லா திண்டாட்டம் அதிகமாகும் என்பது பொருள். இதெல்லாம் தேக்கத்தின் கல்யாண குணங்கள். இதனால் ஏற்படும் பாதிப்பு எந்த அளவுக்கு என்றால், பிரான்சில் மிகப்பெரிய வேலைநிறுத்தம், நெதர்லாந்து நாட்டில் கடுமையான பாதிப்பு ஏற்படுகிறது. இங்கிலாந்தில் கடுமையான பொருளாதார மந்தநிலை ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு பத்திரிகை கூறுகிறது. அடுத்த ஆண்டு முழுவதும் அமெரிக்காவில் இந்த மந்தம் வரப் போகிறது. இங்கெல்லாம் மந்தநிலை ஏற்படும்போது இந்தியப் பொருளாதாரம் பூத்துக் குலுங்குமா? ஆக மிகப்பெரிய நெருக்கடியை நோக்கி இன்றைய உலகம் சென்று கொண்டிருக்கிறது.
உக்ரைனில் போர் நடக்கிறது. எதற்காக ரஷ்யா தாக்குகிறது? ரஷ்யா ஏதோ பெரிய தவறு செய்துவிட்டு உக்ரைனை தாக்குகிறது. உக்ரைன் சாது. ஆனாலும் அது வலுவாக போராடுகிறது. ரஷ்யாவிடமிருந்த பகுதிகளை உக்ரைன் மீட்டது என்று செய்திகள் வந்துகொண்டிருக்கிறது. இதன்பின்னணியில் அமெரிக்காவின் ஆயுத விற்பனைக்கான நோக்கம் மறைக்கப்படுகிறது. சண்டையை மூட்டிக்கொண்டே இருந்தால் தான் அமெரிக்காவின் ஆயுதங்கள் விற்க முடியும். அவை உக்ரைன் சண்டையில் ஆர்வமாக உள்ளன. உக்ரைனில் சண்டையிடுவது ரஷ்யா அல்ல. நேட்டோ நாடுகள். சோவியத் யூனியனில் இருந்து நாடுகளை கொஞ்சம் கொஞ்சமாக தன் பக்கம் கொண்டுவந்துகொண்டே இருக்கிறது. அவையெல்லாம் முதலாளித்துவ நாடாகிவிட்டன. உக்ரைனையும் பிடித்துவிட்டால் சோவியத் யூனியனும் வீழும். ரஷ்யா போய்விடும். ரஷ்யா போய்விட்டால் அருகில் இருக்கும் சீனாவுக்கு பாதிப்பு. பூகோள அரசியலை தன்வசம் வைத்துக் கொள்ளவே உக்ரைன் சண்டை நடைபெறுகிறது. ஏகாதிபத்தியம் இருக்கும்வரை யுத்தம் இருக்கும். முதலாளித்துவம் இருக்கும் வரை சுரண்டல் இருக்கும். முதலாளித்துவ சுரண்டலின் ஒரு புதிய காலகட்டத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்று கூறினார்.