சென்னை,ஏப்.18- தமிழ்நாட்டில் மின்வெட்டு இல்லை என்றும் அனைத்து முன்னெச் சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள் ளப்பட்டிருக்கிறது என்றும் அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார். சட்டப்பேரவையில் கேள்வி நேரத்திற்கு பிறகு, கோடைக் காலத்தில் ஏற்படும் மின்வெட்டை சமாளிக்க எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அரசின் கவனத்துக்கொண்டு வரப்பட்டது. அப்போது நடந்த விவாத்தில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்றக்குழுத் தலைவர் நாகை மாலி,“சுட்டெரிக்கும் கோடை வெயில் வாட்டி வதைத்துக்கொண்டு வருகிறது. இந்த நேரத்தில் மின்சாரத்தை சீராக வழங்குவது அரசின் கடமையாகும். மின்வெட்டு மற்றும் மின் தடையால் பொதுமக்கள் பாதிக்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என்றார்.
அதிமுக உறுப்பினர் தங்கமணி,“ கோடை வெயில் அதிகரித்து வருவ தால் தினமும் மின் வெட்டு ஏற்படுகி றது. இதனால் பொதுமக்கள் மட்டு மின்றி விசைத்தறியாளர்களும், விவசாயிகளும் பாதிக்கப்படுகிறார்கள். பொதுவாக கோடைக் காலத்தில் நிலக் கரி பற்றாக்குறை ஏற்படுவது வழக்கம் தான். எனவே, வரும் நாட்களில் மின்வெட்டு இல்லாமல் பாத்துக் கொள்ள வேண்டும்” என்றார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாரிமுத்து, பாமக சார்பில் ஜி.கே. மணி ஆகியோர் பேசினர். இதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் செந்தில்பாலாஜி,“ கடந்த காலங்களைக் காட்டிலும் தற்போது மின்சாரத் தேவையின் அளவு அதி கரித்துள்ளது. ஆனாலும், உற்பத்தியும் குறைந்திருக்கிறது. எனவே, அனைத்து வகையிலும் மின்சாரம் கொள்முதல் செய்யும் பணியும் போர்க்கால அடிப்படையில் நடந்து வருகிறது. நிலக்கரியும் தற்போது இருப்பு பற்றாக்குறையாக உள்ளதால் இறக்குமதி செய்ய ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. மின் பற்றாக்குறையை சமாளிக்க அரசும் துறையும் அனைத்து வகையிலும் முன்னெச்சரிக்கையாக செயல்பட்டு வருகிறது. எனவே, பொதுமக்களுக்கு மட்டுமல்லாமல் விவசாயிகளுக்கும் சீரான மின்சாரம் வழங்கப்படுகிறது. ஆகவே மின்வெட்டு என்பதே இருக்காது. மின் தடையும் ஏற்படாது” என்றார்.