மக்களவை தேர்தலில் பிரதிபலிக்கும் பிரச்சனைகள் குறித்து லோக்நிதி நடத்திய கருத்து கணிப்பு முடிவுகளை சுட்டிக்காட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். புகழ்பெற்ற ஆய்வு அமைப்பு, 2024 மக்களவைத் தேர்தலில் முக்கியப் பிரச்சனைகள் எவை என மக்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தியுள்ளது. இதில், 27 விழுக்காட்டினர் ‘வேலையின்மை’ தான் முக்கிய பிரச்சனை என்றும், 23 விழுக்காட்டினர் விலைவாசி உயர்வு என்றும், 55 விழுக்காட்டினர் கடந்த 5 ஆண்டு பாஜக ஆட்சியில் ஊழல் அதிகரித்து விட்டதாகவும், ஏழை மக்களில் 76 விழுக்காட்டினர் விலைவாசி உயர்வு இத்தேர்தலில் முக்கிய பிரச்சனை என்றும் கூறியுள்ளனர். இதிலிருந்தே இந்த பாஜக ஆட்சியின் முடிவுக்கு கவுண்டவுன் ஆரம்பம் ஆகிவிட்டது. அதிகரித்துவிட்ட ஊழல், கார்ப்பரேட்டுகளிடம் மீண்டும் மீண்டும் குவியும் செல்வம், தொடரும் பாகுபாடுகள் என மக்களின் அன்றாட வாழ்வாதாரப் பிரச்சனைகளை தீர்ப்பதில், பத்தாண்டு கால பாஜக ஆட்சி படுதோல்வி அடைந்து விட்டதை மக்கள் உணரத் தொடங்கி விட்டார்கள். சிலரை சில காலம் ஏமாற்றலாம்; எல்லோரையும் எப்போதும் ஏமாற்ற முடியாது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.