states

புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதியால் தமிழகத்திற்கு பாதிப்பு இல்லை

சென்னை,டிச.12- தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமாகியுள்ளது என்று  வானிலை ஆய்வு மையத் தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்தார். தென் மண்டல வானிலை ஆய்வு மையத் தலைவர் எஸ்.பாலச்சந்திரன் திங்களன்று (டிச.12) சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “மாண்டஸ் புயலின் மீதமுள்ள பகுதி வட தமிழகத்தின் உள் பகுதிகளில் நிலவி வருகிறது. இது தொடர்ந்து மேற்கு திசையில் நகர்ந்து மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதிகளுக்கு செல்லும். அங்கு செவ்வாயன்று (டிச.13) புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும். இது வரும் நாட்களில் மேற்கு, வட மேற்கு திசையில் நகர்ந்து இந்திய கடல் பகுதிகளை விட்டு விலகிச் செல்லும். இது காரணமாக தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை”என்றார்.

அடுத்த 5 நாட்களில் எந்த முக்கிய மழை நிகழ்வுகளும் இல்லை என்றும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மிதமான மழை பெய்யும். ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும்  என்றும் அவர் கூறினார். செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த  அவர், “வடகிழக்கு பருவ மழை தொடங்கிய அக்டோபர்  1 ஆம் தேதி முதல் டிச.12 வரைக்கும் தமிழகம், புதுவை,  காரைக்கால் பகுதிகளில் 401 மி.மீ மழை பதிவாகி உள்ளது.  இது இயல்பான மழைதான் என்றும் தெரிவித்தார். மாண்டஸ் புயலுக்கு முன்பு  வரைக்கும் சென்னையில் இயல்பைக் காட்டிலும் 10 விழுக்காடு குறைவாகத் தான் மழை பெய்திருந்தது. புயலுக்கு பிறகு, 256 மி.மீ மழை பதிவாகி உள்ளது.  இது இயல்பை விட 13 விழுக்காடு அதிகம் என்றும் அவர் கூறினார். இதேபோன்று, காஞ்சிபுரம், ராணிப் பேட்டை, திருவள்ளூர், வேலூர் மாவட்டங்களில் மாண்டஸ் புயலுக்கு முன்புவரை பல பகுதிகளில் 20 விழுக்காடுக்கும் குறைவாகத்தான் மழை பெய்திருந்தது. புயல் காரணமாக கூடுதலாக 18 விழுக்காடு மழை கிடைத்துள்ளது என்றும் பாலச்சந்திரன் கூறினார்.