states

இயற்கை விவசாயத்திற்கு ஆதரவு

மால்டா அரசு புதிய திட்டம் வாலெட்டா, ஜூலை 26- இயற்கை முறையில் விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு ஊக்கத் தொகை வழங்கும் புதிய திட்டத்தை மால்டா அரசு உருவாக்கியிருக்கிறது. ஐரோப்பாவின் தென் பகுதியில் உள்ள தீவு நாடான மால்டா விவசாயத்துறையில் பெரும் முன்னேற்றத்தைக் காண்பதற்கான முயற்சிகளில் கடந்த சில ஆண்டுகளாக ஈடுபட்டிருக்கிறது. உற்பத்தியைப் பெருக்குவதிலும், தொழில் நுட்பங்களிலும் கவனம் செலுத்தி வந்த அந்நாடு, தற்போது இயற்கை விவசாயத்தில் கண் பதித்துள்ளது. இயற்கை விவசாயத்தில் ஈடுபடுபவர்களுக்கு உதவும் வகையிலான புதிய திட்டத்தை அந்நாட்டு விவசாயத்துறை அமைச்சர் அன்டோன் ரெபல்லோ அறிவித்திருக்கிறார். ஐந்து ஆண்டுகளுக்கு நிதியுதவியை வழங்கப் போகிறார்கள். முதல் இரண்டு ஆண்டுகளில் ஒரு ஹெக்டேருக்கு 1,174 யூரோக்கள் வழங்கப்படும். ஆறு ஆண்டுக்காலத்தில் இயற்கை முறையில் விவசாயம் நடைபெறும் நிலத்தின் அளவு இரு மடங்காக அதிகரித்திருக்கிறது. 2030 ஆம் ஆண்டுக்குள் மேலும் இரு மடங்கு அதிகரிக்கச் செய்யும் வகையில் ஊக்கத்தொகைத் திட்டம் இருக்கும். இந்தத் திட்டத்தை வளர்ச்சிக்கான முக்கியக் கருவியாக நாங்கள் பார்க்கிறோம் என்று அன்டோன் ரெபல்லோ தெரிவித்துள்ளார்.