states

சைனிக் பள்ளிகளை காவிமயப்படுத்துவதை நிறுத்துக!

புதுதில்லி, ஏப்.5- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: இந்தியாவில் உள்ள சைனிக் பள்ளிகளைத் தனியார் நடத்துவதற்கு பாஜக தலைமையிலான ஒன்றிய அரசாங்கம் வசதி செய்து கொடுத்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்தி களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு ஆழ்ந்த கவலையுடன்  கவனத்தில் கொள்கிறது. சைனிக் பள்ளிகள் என்பவை காலங்காலமாக அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள சுயேச்சையான சைனிக்  பள்ளி சங்கத்தால் நடத்தப்பட்டு வந்திருக்கின்றன. சைனிக் பள்ளிகள், ராணுவத்தில் காலாட்படைக்கும் கப்பல் படைக்கும் ஆட்களைத் தெரிவு செய்வதற்கான முன்னணி தேசிய பாது காப்பு அகாதமி (National Defence Academy) மற்றும் இந்திய கப்பல் அகாதமி (Indian Naval Academy) ஆகியவற்றில் சேர்வதற்காக மாணவர்களை வளர்த்தெடுக்கும் முக்கியமான பங்கினை ஆற்றி வந்தன.

இவற்றில் படித்த மாணவர்கள் தேர்ச்சி பெற்று ராணுவத்தில் கணிசமான அளவிற்கு மிக முக்கிய அதிகாரிகளாக உயர்ந்துள்ளார்கள்.    இப்போது அரசின் புதிய கொள்கையின்படி பொது-தனியார்-கூட்டுறவு (PPP-public-partnership) மாடலில் அரசாங்கம் கொண்டுவரத் தீர்மானித்திருக்கிறது. இவ்வாறு  இதற்காக இணைக்கப்படும் நிறுவனங்களில் கணிசமான அளவிற்கு ஆர்எஸ்எஸ்/பாஜக-வுடன் இணைந்தவைகளாகும். கல்வியை காவிமயப்படுத்துவதற்கான போக்கு மீண்டும் கொண்டுவரப்படுவதாகவே தெரிவதாலும், நம்முடைய ராணுவத்தின் உயர் அமைப்புகளிலும் இது மிகப்பெரிய அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதாலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு அரசின் இம்முடிவை கண்டிக்கிறது.  அரசு இந்த முடிவை விலக்கிக் கொள்ள வேண்டும் என்றும், அதன் மூலம் சைனிக் பள்ளிகளின் தேசிய மற்றும் மதச்சார்பற்ற குணாம்சத்தை உத்தரவாதப்படுத்திட வேண்டும் என்றும் அரசியல் தலைமைக்குழு கோருகிறது.  இவ்வாறு அரசியல் தலைமைக்குழு அறிக்கையில் கோரியுள்ளது.