states

ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு ஆட்சியர், ஐஜி, டிஐஜி, எஸ்.பி மீது நடவடிக்கை எடுக்க ஆணையம் பரிந்துரை

சென்னை,ஆக.18-  ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக் காரர்களை குருவிகளை சுடுவதைபோல் போலீசார் சுட்டு கொன்றுள்ளதாக ஆணை யம் தெரிவித்துள்ளது.அப்போதைய ஐஜி,  டிஐஜி, எஸ்.பி உள்பட 17 போலீசார் மீது  நடவடிக்கை எடுக்கவும்  ஆணையம் பரிந்துரைத்துள்ளது. மக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்திய தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி மக்கள் பெரும் போராட்டம் நடத்தினர். இதில் முந்தைய அதிமுக அரசின் காவல்துறை நடத்திய கொடூர துப்பாக்கிச்சூட்டில் 13  பேர் கொல்லப் பட்டனர். இதனை அனைத்து அரசியல் கட்சி யினரும் பல்வேறு அமைப்புகளும் கண்டித்தனர். இதுகுறித்து முறையாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆலையை மூட வேண்டும் என்று தமிழக மக்கள் கொந்தளித்தனர். இதன்பின்னரே தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூடி சீல் வைத்தது.

 துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக விசாரிக்க நீதிபதி அருணா ஜெகதீசனை கொண்ட ஒரு நபர் ஆணையம் அமைக்கப் பட்டது. இச்சம்பவம் குறித்து ஆணையம் விசாரணை மேற்கொண்டது.  நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் வியாழனன்று வெளியிட்ட அறிக்கையில், தொலைவில் இருந்து குறிபார்த்து சுடக் கூடிய துப்பாக்கிகள் பயன்படுத்தப் பட்டதும் உடற்கூராய்வில் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. குண்டுகள் பின் தலை வழியே ஊடுருவி நெற்றி வழியாக வெளியே வந்ததன் மூலம், பின்னால் இருந்து சுட்டது அம்பலமாகியுள்ளது. சுட்டுக் கொல்லப்பட்ட 13 பேரில் 6 பேர்  பின்னந்தலையில் சுட்டுக் கொல்லப்பட்டு ள்ளனர். தடியடி, கண்ணீர் புகைவீச்சு, வானத்தை நோக்கி சுடுதல் போன்ற எவ்வித நடவடிக்கையையும் காவல் துறை  மேற்கொள்ளவில்லை. எந்த ஒரு போலீஸ்காரருக்கும் படுகாயம் ஏற்பட வில்லை. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு அப்போதைய காவல்துறை தலைமை பொறுப்பில் இருந்தவர்களின் அப்பட்ட மான தோல்வி என்று தெரிவிக்கப்பட்டுள் ளது. கூட்டத்தை கட்டுப்படுத்த முடிய வில்லை என்ற போலீசாரின் வாதத்துக்கு எந்த ஆதாரமும் இல்லை. போராட்டம் தொடர்பான உளவுத்துறை தகவல் முன்கூட்டியே கிடைத்தும் அப்போதைய ஐஜி நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போலீஸ்காரர் சுடலைக்கண்ணு மட்டும்  17 ரவுண்டுகள் சுட்டுள்ளார். தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகம், 3ம் மைல், எஃப்சிஐ ரவுண்டானா, திரேஸ்புரம் இடங்களிலும் சுடலைக்கண்ணு சுட்டுள்ளார். ஒரே  போலீஸ்காரர் 4 இடங்களில் சுட்டதன் மூலம் அவரை அடியாள் போல் காவல் துறை பயன்படுத்தியது தெரிய வந்துள்ளது. எஃப்சிஐ ரவுண்டானா அருகே சுடலைக்கண்ணு சுட்டபோது எஸ்.பி.  மகேந்திரன், எஸ்.பி. அருண்சக்தி குமார்  உடனிருந்தனர். ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தை கையாள்வதில் ஆட்சியர்  வெங்கடேஷ் தொடக்கம் முதலே அலட்சி யம் காட்டியுள்ளார். போராட்டத்துக்கு முதல் நாள் ஆட்சியர் வீட்டில் இருந்து  கொண்டே உதவி ஆட்சியரை சமாதானக் கூட்டத்துக்கு தலைமை தாங்க அழைத்துள் ளார் என்று அதில் கூறப்பட்டுள்ளது. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக 17 போலீசார் மீது நடவடிக்கை எடுக்க நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. 2018ல் தென்மண்டல ஐ.ஜி.யாக இருந்த சைலேஷ்குமார் யாதவ் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. நெல்லை சரக டி.ஐ.ஜி.யாக இருந்த கபில்குமார் சர்கார், தூத்துக்குடி எஸ்.பி.யாக இருந்த மகேந்திரன், டி.எஸ்.பி.  லிங்கதிருமாறன், 3 ஆய்வாளர்கள், 2 எஸ்.ஐ., ஒரு தலைமை காவலர், 7 காவ லர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது போலீசார் ஒளிந்து கொண்டு துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். எந்தவித ஆத்திரமூட்டலும் இல்லாத போதிலும் போராட்டக்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். போராட்டக்காரர்களின் கண்களில் படாமல் மறைந்து நின்று போலீசார் துப்பாக்கியால் சுட்டனர்.

குரூரமான செயல்

தூத்துக்குடி சம்பவம் போலீசாரின் குரூரமான செயல் என்று நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.  வன்முறையில் ஈடுபட்டவர்களை தடுக்கவே துப்பாக்கிச்சூடு என்ற  போலீசாரின் வாதத்துக்கு எந்த ஆதாரமும் இல்லை. தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் கூடிய போராட்டக்காரர்களை பூங்காவில் ஒளிந்துகொண்டு சுட்டுள்ளனர். போலீசார் தங்களின் வரம்புகளை மீறி செயல்பட்டதாகவும் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் குற்றம்சாட்டியுள்ளது. தவறு செய்த போலீசார் மீது குற்றவியல், துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்துள்ளார்.

ஆட்சியர் மீது நடவடிக்கை 

அப்போதைய தூத்துக்குடி ஆட்சியர் வெங்கடேஷ், பொறுப்புகளை தட்டிக்கழித்து அலட்சியத்துடன் கோவில்பட்டியில் இருந்துள்ளார். ஆட்சியர் வெங்கடேஷ் எவ்வித யோசனையுமின்றி முடிவுகளை எடுத்துள்ளதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

 

;