திருச்சிராப்பள்ளி, ஆக.20 - தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் ஞாயிறன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் மணிமேகலை தலைமை வகித்தார். திருச்சி மாவட்டச் செயலாளர் ஆரோக்கிய ராஜ் வரவேற்றார். மாநில பொருளாளர் மத்தேயு வரவு - செலவு அறிக்கையை சமர்ப்பித்தார். மாநில பொதுச் செயலாளர் ச.மயில் சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். பொதுக்குழு உறுப்பினர் ஜான் கிறிஸ்துராஜ் நன்றி கூறினார். முன்னதாக நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் கூட்டணியின் பொதுச் செயலாளர் மயில் கூறியதாவது: பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வருவோம், இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைவோம், கடந்த ஆட்சியில் பறிக்கப்பட்ட உயர்கல்விக்கான ஊக்க ஊதியத்தை மீண்டும் வழங்குவோம், ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு உரிமையை மீண்டும் வழங்குவோம் என்பன உள்ளிட்ட திமுக அரசின் வாக்குறுதிகள் இன்னும் நிறைவேறவில்லை.
இதனால் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மத்தியில் ஏமாற்றமும், அதிருப்தியும் ஏற்பட்டுள்ளது. மேலும் தொடக்கக் கல்வி துறையில் நடைமுறை யில் உள்ள எண்ணும் எழுத்தும் திட்டத்தால் 1 முதல் 5 வகுப்புகள் வரை பயிலும் மாண வர்களின் கல்வி வளர்ச்சி பின்னடைவை சந்தித்துள்ளது. இத்திட்டத்தால் ஆசிரியர்களின் கற்பித்தல் நேரம் குறைந்து நாள்தோறும் இணையவழியில் தேர்வு நடத்துவதும், மதிப்பீடு செய்வதுமே நடைபெற்று கொண்டிருக்கிறது. மேலும் தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரி யர்கள் நாள்தோறும் இஎம்ஐஎஸ் இணைய தளத்தில் தேவையற்ற பல்வேறு புள்ளி விவ ரங்களை பதிவு செய்ய நிர்ப்பந்திக்கப்படு வதால், ஆசிரியர்கள் நாள் முழுவதும் புள்ளி விவரங்களை பதிவேற்றம் செய்யும் பணியையே செய்ய வேண்டி உள்ளது. ஆசிரியர்கள் பதவி உயர்வு பெற தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்ற உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும். ஆசிரியர்கள் பதவி உயர்வில் செல்ல தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டிய தேவை இல்லை என்பதை தமிழ்நாடு அரசு கொள்கை முடிவாக அறிவித்து, ஒரு சட்ட பாதுகாப்பை வழங்க வேண்டும். மேலும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் கூட்டணியின் சார்பில் செப்டம்பர் 29 அன்று, சென்னையில் 10,000 ஆசிரியர்களை திரட்டி கோட்டை நோக்கி பேரணியாக சென்று, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை மனு அளிப்பது என மாநில செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.