புதுதில்லி, பிப். 10 - அதானி குழுமம் ரூ. 17 லட்சத்து 80 ஆயிரம் கோடி அளவிற்கு பங்குச் சந்தை முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ள நிலையில், “அதானி குழுமச் சொத்துக்களை பிரதமர் நரேந்திர மோடி தேசியமயமாக்கி ஏலம்விட வேண்டும்” என்று சுப்பிரமணியசாமி வலியுறுத்தி யுள்ளார். ஒன்றிய அரசின் முன்னாள் அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான சுப்பிரமணியசாமி, பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்துள் ளார். அவரிடம் எழுப்பப்பட்ட பல்வேறு கேள்வி களுக்கு அவர் பதிலளித்துள்ளார். அந்த வகையில், “நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன் பொறுப்பேற்றதில் இருந்தே, நீங்கள் அவரை விமர்சித்து வருகிறீர்கள். தற்போது அவர் தாக்கல் செய்துள்ள 2023-24 நிதியாண்டிற்கான பட்ஜெட் குறித்து என்ன கருதுகிறீர்கள்..?” என்ற கேள்விக்கு, “இது ஒரு போலியான பட்ஜெட். பட்ஜெட்டில் நான்கு தூண்கள் இருக்க வேண்டும். அரசாங்கத்தின் குறிக்கோள் என்ன? இந்த பட்ஜெட்டில் எந்த நோக்கமும் காணப்படவில்லை. அடுத்த ஆண்டு இந்தியா ஆறரை சதவிகித வளர்ச்சி அடையும் என்று தெரிவித்துள்ளார். சரி, கடந்த ஆண்டின் வளர்ச்சி என்ன?; 2019 முதல் இன்று வரை என்ன நடந்தது? உண்மையில் நாம் ஆண்டுக்கு 3 சதவிகிதம் அல்லது 4 சதவிகிதம் மட்டுமே வளர்ந்துள்ளோம். அப்படியிருக்க 6 சதவிகித வளர்ச்சியை அடைய எப்படி செயல்படப் போகிறோம்?; எதற்கு முன்னுரிமை தரப்போகிறோம்.. விவசாயத்திற்கா? அல்லது தொழிற்துறைக்கா அல்லது சேவைத்துறைக்கா? அரசின் உத்தி என்ன? - இவை எவை குறித்தும் பட்ஜெட்டில் இல்லை” என்று சுப்பிரமணியசாமி விமர்சித்துள்ளார்.
அண்மையில் பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி பர்வேஸ் முஷாரப் மறைந்த போது, “வருந்தத்தக்கது” என்று டுவிட்டர் பக்கத்தில் சுப்பிரமணியசாமி பதிவிட்டிருந்தார். இது சமூக ஊடகங்களில் விமர்சனங்களுக்கு உள்ளானது. இந்நிலையில், “பாஜக உறுப்பினர்களால் கூட உங்களின் டுவிட்டர் பதிவு பரவலாக விமர்சிக்கப் பட்டது குறித்து நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?” என்று அவரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு “’கார்கில் போரில் இந்தியர்களைக் கொன்ற கசாப்புக் கடைக்காரர் பர்வேஸ் முஷாரப்’ என்றுதான் என் மீது நிறைய விமர்சனங்கள் வைக்கப்பட்டுள்ளன. போரின் போது (1999 இல்) பாகிஸ்தான் பிரதமராக இருந்தவர் நவாஸ் ஷெரீப். பர்வேஸ் முஷாரப் பாகிஸ்தான் ராணுவத்தின் தலைமைத் தளபதி மட்டும்தான். தளபதி என்ற வகையில் அவர் இந்திய ராணுவத்தை சுடச் சொன்னார். மக்களைச் சுடச் செல்லவில்லை. அப்படியிருக்க, முஷாரப்பை கசாப்புக் கடைக்காரர் என்று எப்படி அழைக்க முடியும்?” என்று சுப்பிரமணியசாமி எதிர்க்கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், “கார்கில் தாக்குதலுக்குப் பின்னால் இருந்த உண்மையான மனிதர் நவாஸ் ஷெரீப். அவர் பற்றி ஏன் யாரும் பேசவில்லை. சொல்லப்போனால், பிரதமர் மோடி அனைத்து நெறிமுறைகளையும் மீறி, பாகிஸ்தானுக்குச் சென்று நவாஸ் ஷெரீப்புடன் மதிய உணவு சாப்பிட்டதாக என் நினைவு. மற்றபடி முஷாரப்பை நான் பலமுறை சந்தித்ததால் அவரை அறிவேன். நான் அவரை பாகிஸ்தானிலும், இந்தியாவிலும் சந்தித்துள்ளேன். அப்போது அவர் ஆட்சிக் கவிழ்ப்பு மூலம் ஜனாதிபதியானார். அவர் ஜனாதிபதியானதும் இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன் என்று கூறினார். மேலும், தலிபான்களை தற்காலிகமாக முடிப்பதற்கு அமெரிக்காவிற்கு உதவினார். எனவே, இவர்கள் (தன்னை விமர்சிக்கும் பாஜக சமூகவலைதள வாசிகள்) வேடிக்கையான மனிதர்கள். அவர்கள் என்னிடம் கேள்வி கேட்க விரும்பினால், கார்கில் போரின் உண்மையான சிற்பி யார், அந்த சிற்பியான நவாஸ் ஷெரீப்பின் இடத்திற்கு மோடி ஏன் சென்றார்? என்ற என்னுடைய கேள்விகளுக்கு முதலில் பதிலளிக்க வேண்டும். அதை அவர்கள் செய்ய மாட்டார்கள்” என்று சுப்பிரமணியசாமி தெரிவித்துள்ளார். “அதானி விவகாரத்தை ஒன்றிய பாஜக அரசு எவ்வாறு கையாள்வதாக நீங்கள் நினைக்கிறீர்கள், எதிர்க்கட்சிகள் அதானி குழுமத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நாடாளுமன்றத்தை முடக்கி வருவது குறித்து உங்களது கருத்து என்ன?” என்ற கேள்விக்கும் சுப்பிரமணியசாமி பதிலளித்துள்ளார்.
அதில், “அதானி குழுமத்தின் அனைத்து சொத்துகளையும் பிரதமர் நரேந்திர மோடி தேசியமயமாக்க வேண்டும், பின்னர் அதை ஏலம் விட வேண்டும், அந்த பணத்தை வைத்து, அதானி குழுமத்திடம் பணத்தை இழந்த மக்களுக்கு உதவிகள் வழங்கப்படுவதை நான் பார்க்க விரும்புகிறேன்” என்று சுப்பிரமணியசாமி தெரிவித்துள்ளார். மேலும், “அதானியுடன் காங்கிரசுக்கு தொடர்பு இல்லை என்பது போல பேசுகின்றனர். அவர்களில் பலர் அதானியுடன் தொடர்பில் இருப்பது எனக்கு தெரியும், ஆனால் நான் காங்கிரசைப் பற்றி கவலைப்படவில்லை. பாஜகவின் நேர்மை தன்மை நிலைநாட்டப்பட வேண்டும் என்றே நான் விரும்புகிறேன். இதுதான் பொது மக்களின் எதிர்பார்ப்பாகவும், கருத்தாகவும் உள்ளது” என்றும் சுப்பிரமணியசாமி குறிப்பிட்டுள்ளார்.