எனது மதிப்பிற்குரிய பெரிய அய்யா அவர்களுக்கு வணக்கம். கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை சேர்ந்தவன் என்ற முறையில் இந்த மடலை எழுதுகிறேன். பார்ப்பனப்பட்டு ரெங்கநாதக் கவுண்டர், சித்தணி ஏழுமலை, ஒரத்தூர் ஜெகநாதன், முண்டியம்பாக்கம் சிங்காரவேலு, கயத்தூர் முனியன், கயத்தூர் முத்து, கோலியனூர் கோவிந்தன், கோலியனூர் விநாயகம், சிறுதொண்டமாதேவி தேசிங்கு, தொடர்ந்தனூர் வேலு, கயத்தூர் தாண்டவராயன், பார்ப்பனப்பட்டு வீரப்பன், பேரங்கியூர் அண்ணாமலைக் கவுண்டர், அமர்த்தானூர் மயில்சாமி, குருவிமலை முனுசாமி நாயகர், சிவதாபுரம் குப்புசாமி, கொழப்பலூர் முனுசாமி கவுண்டர், வெளியம்பாக்கம் இராமகிருஷ்ணன், மொசரவாக்கம் கோவிந்தராஜ் நாயக்கர், கடமலைப்புத்தூர் மணி, புலவனூர் ஜெயவேல் பத்தர் ஆகிய 21 பெயரும் தங்களுக்கு நினைவு இருக்கும் என நம்புகிறேன். வன்னியர் சமூகத்திற்கு மாநிலத்தில் 20 சதமும், மத்தியில் 2 சதமும் இட ஒதுக்கீடு, மண்டல் குழு பரிந்துரையை அமலாக்க வேண்டும் என்ற முழக்கங்களை முன் வைத்து 17.09.1987 - 23.09.1987 தேதிகளில் வன்னியர் சங்கம் நடத்திய தொடர் சாலை மறியலின் போது, துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்கள் அவர்கள். அவர்கள் பெயர்களை மனப்பாடமாய் உங்களால் ஒப்பிக்கக்கூட முடியும்.
தமிழகத்தில் நடந்த போராட்டத்தை ஒன்றிய அரசின் துணை ராணுவப்படையைக் கொண்டுவந்து, எம்.ஜி.ஆர் தலைமையிலான மாநில அரசு அடக்கியது. அந்த போராட்டத்தின் வீரியம் என்ன என்பதை திருவண்ணா மலையில் தலைமறைவாக இருந்து திண்டிவனத்தில் கைது செய்யப்பட்ட நீங்கள் உணர்ந்தவர் என்பதில் எள் முனை அளவு கூட ஐயமில்லை. வடமாவட்டங்களில் சாலைகள் துண்டாடப்பட்டு, மரங்கள் வெட்டப்பட்டு, பல இடங்கள் மறிக்கப்பட்டு, உச்சத்தில் கொழுந்துவிட்டு எரிந்த அப்போராட்டத் தீயின் அனல் தமிழகத்தை வாட்டியது. ஒருவாரத் தொடர் சாலை மறியல் போராட்டம் மிகப்பெரிய அளவில் பேசுபொருளானாலும்கூட எம்.ஜி.ஆர் தலைமையிலான அதிமுக அரசு, இடஒதுக்கீடு போராட்டக்காரர்களுடன் பேசுவதற்கு பதிலாக, அவர்களை அடக்குவதற்கு காவல் துறையினரை ஏவியது. ஒன்றிய துணை ராணுவப்படை வரவழைக்கப்பட்டதும், 21 பேர் துப்பாக்கி குண்டுகளுக்கு இரையாகியதும், போராட்டத்தில் பங்கெடுத்த 18,000-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதும், அடக்குமுறையால் அந்த போராட்டத்தை ஒடுக்கியது அன்றைய அதிமுக அரசு என்பதை நீங்கள் மறுக்க மாட்டீர்கள். 1989-ல் தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலில் திமுக வெற்றி பெற்று தமிழக முதலமைச்சராக மு.கருணாநிதி பொறுப்பேற்ற உடன் 1989-ல் அனைத்து வன்னியர் சங்க மற்றும் சமூக தலைவர்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி, வன்னியர் சமூகத்துடன் சேர்ந்து 108 சமூகங்களுக்கு பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான மொத்த இட ஒதுக்கீட்டான 50 சதவிகிதத்தில் இருந்து தனியாக 20 சதவிகிதத்தை பிரித்து மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என்ற தனிப்பிரிவை கலைஞர் உருவாக்கினார்.
மூகத்தினர், கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் இடஒதுக்கீடு பெற்றனர். நீங்கள் ஆரம்பத்தில் கலைஞரை எதிர்த்தாலும் இதைக் கொடுத்ததால் பின்பு அவருக்கு பாராட்டு விழா நடத்தியதை தமிழகம் கண்டிருக்கிறது. நீங்களும் அதை மறுக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்! அய்யா, இதையெல்லாம் நான் நினைவூட்டக் காரணம் உங்கள் போராட்டத்தை, தியாகத்தை, உழைப்பை உயர்வாக நினைக்கும் காரணத்தினால் மட்டுமே! நீங்கள் ஒடுக்கப்பட்ட சமூகத்தின் அடையாளங்களில் ஒருவர் என்பதில் நான் உறுப்பினராய் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மாற்று கருத்தில்லை. ஆனால் உங்கள் அரசியல் நிலைப்பாடு மிகவும் குழப்பத்தை கொடுக்கிறது! இந்திய நாடு முழுவதும் உள்ள பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்ற மண்டல் கமிஷன் பரிந்துரையை இந்தியாவே ஆதரிக்க, அதை எதிர்த்து கடுமை யான போராட்டங்களை நடத்தியது ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் பாரதிய ஜனதா கட்சியும் என்பது தாங்கள் அறியாதது அல்ல. இடஒதுக்கீடு என்பது, இன்றைய சாதிய சமூகத்தில், அடிப்படை சமூக நீதிக்கான முன் நிபந்தனை என்ற நிலைப்பாட்டை நீங்கள் ஏற்றுக்கொண்டுதான் போராட்டங்களை முன் எடுத்தீர்கள். ஆனால் இட ஒதுக்கீடு தங்கள் ஆதிக்கத்தை உடைத்துவிடும் என்பதால் பிராமணிய ஆதிக்க கோட்பாட்டால் வழி நடத்தப்படும் ஆர்.எஸ்.எஸ் கடுமையாக எதிர்க்கிறது. எப்படி அவர்களுடன் உங்களால் சமரசம் கண்டு கூட்டணி அமைக்க முடிகிறது?
காரல் மார்க்ஸ் - பெரியார் - அம்பேத்கர் படங்களை உங்களது உறுப்பினர் அட்டையில் பொறித்து கட்சி உறுப்பினர்களுக்கு கொடுத்த தங்கள் உயரிய சிந்தனையில் ஏன் இந்த தடுமாற்றம்? இடஒதுக்கீட்டை அழித்திட கடந்த 10 ஆண்டுகளாக மோடி அரசு செய்யும் அநியாயங்களை அறியாதவரா நீங்கள்? நீட் தேர்வு ஒரு உதாரணம் போதாதா? தமிழக கிராமப்புற மாணவர்களை - உங்கள் மொழியில் சொல்வதென்றால் பாட்டாளி சொந்தங்களை - மருத்துவக் கல்லூரிக்கு வெளியே நிறுத்தியது முறையா? அரசுத்துறை இருந்தால்தானே இட ஒதுக்கீடு கேட்பீர்கள்; எல்லாவற்றையும் தனியாருக்கு கொடுத்தால் இட ஒதுக்கீடு என்ற பேச்சுக்கே இடமில்லை அல்லவா! கடந்த 10 ஆண்டுகளாக மோடியின் ஆட்சி ஒன்றிய அரசுத் துறை நிறுவனங்களில் 9.50 லட்சம் காலியிடங்களை பூர்த்தி செய்யவில்லையே! அப்படி பூர்த்தி செய்தால் இட ஒதுக்கீடு அமலாக்கம் செய்யப்பட வேண்டும்; இது அவர்களது தத்துவார்த்தக் கொள்கைக்கு எதிரானது, எனவே யாருக்கும் வேலை இல்லை. அடி தட்டு மக்கள் உயர்ந்த பதவிக்கு வரக் கூடாது என்பது தான் அவர்கள் நோக்கம்.
எதற்காக புதிய கல்விக் கொள்கையை அமலாக்கத் துடிக்கின்றார் மோடி? கடந்த 5 ஆண்டுகளில் ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம் போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிக்க முடியாத மாணவர்கள் எண்ணிக்கை 2500 க்கும் மேல், இவர்கள் அனைவரும் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் என புள்ளி விபரங்கள் அடிப்படையில் நாடு அறியும். பிற்படுத்த மக்கள் நலனுக்காக அவர்களது சமூக நீதியான இட ஒதுக்கீட்டிற்காக துவங்கிய தங்கள் கட்சி பாசிச பாஜகவுடன் ஒட்டி உறவாடுவது நல்லதா, அய்யா? சித்தாந்த ரீதியாக பார்த்தால், பொருளாதார ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்கள் முன்னேற்றம் அடையக்கூடாது என்பதுதான் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அடிப்படைத் தத்துவம். அதைதான் மோடி அரசு நடைமுறைபடுத்தி கொண்டிருக்கிறது. அவர்களுடன் நீங்கள் கைகோர்த்து நிற்பது நியாயம்தானா? எளிய மக்களுக்கு மருத்துவ சேவை செய்த மருத்துவர் ச.ராமதாஸ் அய்யாவிடம் கேட்கிறேன்; பலர் உங்களை சூட்கேசுக்காக விலை போகிறார் என்கிறார்கள். அதில் எனக்கு நம்பிக்கை இல்லை. நீங்கள் தமிழகத்தின் மிக முக்கிய ஆளுமை. அதனால் கேட்கிறேன்.... கோபம் கொள்ளாமல் பதில் சொல்லுங்கள் அய்யா... பதினென் கீழ் கணக்கு நூல்களில் ஒன்றான சிறுபஞ்ச மூலம் என்ற நூலில் ஆசிரியர் காரியாசான் சொல்கிறான்:
சிலம்பிக்குத் தன் சினை கூற்றம்; நீள் கோடு விலங்கிற்குக் கூற்றம்; மயிர்தான் வலம் படா மாவிற்குக் கூற்றம் ஆம்; ஞெண்டிற்குத் தன் பார்ப்பு; நாவிற்கு நன்று அல் வசை... நீங்கள் இலக்கியம் படித்தவர்... இருப்பினும் இதற்கான அர்த்தம் சொல்கிறேன். சிலந்திப் பூச்சிக்கு அதன் முட்டையும், மிருகங்களுக்கு அவற்றின் நீண்ட கொம்புகளும், கவரிமானுக்கு அதன் மயிரும், நண்டுக்கு அதன் குஞ்சுகளும், ஒருவனுடைய நாவிற்கு வசை மொழியும் எமனாகும்.
கொடூர விஷம் கொண்ட சிலந்தியின் முட்டைகளை தேசம் முழுதும் விதைக்கும், வாய் முழுதும் சாதிய வன்மத்தை, மனுவாதத்தை, சனாதனத்தை வைத்திருக்கும் நச்சரவம் போல நம்மை அடிமையாக்கும் மோடியின் பாரதிய ஜனதா கட்சியுடனா உங்கள் கூட்டணி? இடஒதுக்கீடு எனும் சமூக நீதிக்கு எதிராக சூழ்ச்சி வலை பின்னும் பாரதிய ஜனதா கட்சியுடனா உங்கள் கூட்டணி?
பதில் சொல்லுங்கள் அய்யா!