திருப்பூர், ஏப்.13- பஞ்சு, நூல் விலை கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு 100 சதவிகிதத்துக்கு மேல் விலை உயர்ந்துள்ளதால் பின்னலாடைத் தொழில் சில மாதங்களுக்கு மட்டுமே தாக்குப் பிடிக்க முடியும், எனவே இறக்குமதி வரியை முழுமையாக நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கம் (சைமா) தலைவர் வைகிங் ஏ.சி.ஈஸ்வரன் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது: கடந்த பல ஆண்டுகளாக பின்னலாடை உற்பத்தியில் ஈடுபட்டுள்ள திருப்பூர் ஆயத்த ஆடை ஏற்றுமதியும், உள்நாட்டு உற்பத்தியும் செய்ய முடியாமலும், லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பைத் தர இயலாமலும் திணறிக் கொண்டிருக்கும் விசயத்தை பல முறை ஒன்றிய, மாநில அரசுகளுக்குத் தெரிவித்திருக்கிறோம். கொரோனா நோய் தாக்குதலில் இருந்து வெளியே வந்து கொண்டிருக்கும் நேரம் பார்த்து பஞ்சு, நூல் விலை அபரிமிதமாக உயர்ந்து கொண்டே போகிறது.
கடந்த வருடம் ரூ. 42 ஆயிரத்துக்கு விற்ற 360 கிலோ கொண்ட ஒரு கேண்டி பஞ்சு தற்போது ரூ.95 ஆயிரத்தை (அதாவது 100 சதவிகித்திற்கு மேல்) எட்டி விட்டது. பஞ்சு விலை உயர்வைத் தாக்குப் பிடிக்க முடியாமல் நூற்பாலைகள் நூல் விலையை ஏற்றிவிட்டனர். அத்தனை சுமையும் பின்னலாடை உற்பத்தியாளர்கள் தலையில் விழுந்து விட்டது. இதன் அடிப்படை காரணத்தை ஆராய்ந்தால் இந்த வருடம் 360 லட்சம் பேல் பஞ்சு உற்பத்தி இருக்கும் என மதிப்பிட்டது தவறாகிவிட்டது. 300 லட்சம் பேல் உற்பத்தி கிடைப்பதே சிரமமாக உணரப்படுகிறது. பஞ்சு ஏற்றுமதிக்கு 32 லட்சம் பேல் உபயோகிக்கப்பட்டுள்ளது. பன்னாட்டு கார்ப்ரேட் எம்என்சி நிறுவனங்கள் 25 லட்சம் பேல் இருப்பு வைத்துள்ளன. நூற்பாலைகளுக்கு 250 லட்சம் பேல் பஞ்சு மட்டுமே கிடைத்துள்ளது. இதன் மூலம் 50 லட்சம் பேல் உள்நாட்டு உற்பத்திக்கு பற்றாக்குறையாக அமைந்துள்ளது.
தொடர்ந்து 10 வருடங்களாக பருத்தி விதைகளை மாற்றாமல் இருப்பது கூட பருத்தி உற்பத்தி குறைவுக்கு காரணமாக இருக்கக்கூடும். இன்றைய சூழ்நிலையில் பின்னலாடை தொழில் சில மாதங்களுக்கு மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும். பின்னலாடை உற்பத்தியாளர்கள் சார்பில் முன்வைக்கும் வேண்டுகோள், உள்நாட்டு பஞ்சு உற்பத்தி போதுமானதாக இல்லாததால் இறக்குமதியை எளிதாக்கி, இறக்குமதி வரியை முழுமையாக ரத்து செய்வதன் மூலம் ஓரளவிற்கு விலையை கட்டுக்குள் கொண்டு வர முடியும் என நம்புகிறோம். பிரதமர் ஜவுளித் துறை, வர்த்தகத் துறை அமைச்சர்களுடன் கலந்து பேசி திருப்பூர் ஆயத்தஆடை தொழில், கைத்தறி விசைத்தறி ஆகிய தொழில்களுக்கு பாதிப்பு வராமலும், லட்சக்கணக்கான தொழிலாளர்களது வேலை வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ளவும் உதவ வேண்டும். இவ்வாறு வைகிங் ஏ.சி.ஈஸ்வரன் கேட்டுக் கொண்டிருக்கிறார்.