சேலம், ஜூன் 27- பெரியார் பல்கலைக்கழக பட்ட மளிப்பு விழாவில் பங்கேற்கும் மாண வர்கள் கருப்புச் சட்டை அணியக்கூடாது என பல்கலைக்கழகம் சுற்றறிக்கை அனுப்பியதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் இச்சுற்றறிக்கையை பல்கலைக்கழகம் திரும்பப் பெற்றுள்ளது. சேலம் பெரியார் பல்கலைக்கழ கத்தில் இன்று (ஜூன் 28) 21ஆவது பட்ட மளிப்பு விழா நடைபெறுகிறது. இந்த நிகழ்வில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங் களை வழங்குகிறார். இந்நிலையில், சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் தங்கவேலு, பெரியார் பல்கலைக்கழக இணைவு பெற்ற கல்லூரிகளுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பினார். இதில், காவல்துறையின் அறிவுறுத்தலின் பேரில், பல்கலைக்கழக பட்ட மளிப்பு விழாவில் பங்கேற்கும் மாண வர்கள் யாரும் கருப்பு சட்டை அணிந்து வரக்கூடாது என தெரிவிக்கப்பட்டிருந்தது. பல்கலைக் கழக நிர்வாகத்தின் இந்த சுற்றறிக்கை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்திய மாணவர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
இந்நிலையில், பல்கலைக்கழக பதிவாளர் சார்பில் மீண்டும் ஒரு சுற்ற றிக்கை செவ்வாயன்று அனுப்பப்பட்டது. அதில், பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கருப்பு சட்டை அணியக் கூடாது என்ற சுற்றறிக்கையை திரும்பப் பெறுவதாக பல்கலைக்கழக பதிவாளர் தங்கவேலு தெரிவித்துள்ளார்.
காவல்துறை மறுப்பு
இந்நிலையில், காவல்துறை சார்பாக எந்த ஒரு அறிவுறுத்தலும் வழங்கப்பட வில்லை என காவல்துறை கண்காணிப் பாளர் பெரியார் பல்கலைக்கழக பதிவாள ருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். இதுகுறித்து இந்திய மாணவர் சங்கத்தின் சேலம் மாவட்டக்குழு சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், காவல்துறை அறிவுறுத்தல் படி தான் பல்கலைக்கழகம் இவ்வாறான சுற்ற றிக்கை வெளியிட்டது என துணைவேந்தர் சொன்னதாக பதிவாளர் சுற்றறிக்கை வெளியிட்டார். பல்கலைக்கழக நிர்வா கம், ஆளுநருக்கு விசுவாசம் காட்டு வதற்காக காவல்துறையை கைகாட்டும் வேலையை செய்வது எந்த விதத்திலும் சரியல்ல. காவல்துறை சொன்னதாக பொய்யாக குறிப்பிட்டு சுற்றறிக்கை வெளியிட்ட பல்கலைக்கழக துணை வேந்தர் மற்றும் பதிவாளர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, சேலம் வரும் ஆளு நருக்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்பட மதச்சார்பற்ற கட்சிகள் கருப்புக் கொடி போராட்டத்தில் ஈடுபடுகின்றன.