புதிய நாணயம்
பிரேசிலியா, மே 9- டாலரைச் சார்ந்திருக்க வேண்டிய கட்டாயத்திலிருந்து விடுபட லத்தீன்-அமெரிக்க நாணயம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்று பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதி லூலா டா சில்வா வலியுறுத்தியுள்ளார். பிரேசிலின் புதிய ஜனாதிபதியைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் வரும் அக்டோபரில் நடைபெறவிருக்கிறது. இந்தத் தேர்தலில் லூலா போட்டியிடவிருக்கிறார். இதற்கான பிரச்சாரத்தைத் துவக்கிப் பேசுகையில்தான் இந்த ஆலோசனையை முன் வைத்துள்ளார். உலகின் பல நாடுகளும் டாலரைச் சார்ந்திருப்பதில் இருந்து விடுபட வேண்டும் என்ற விவாதத்தில் இறங்கியுள்ள வேளையில்தான் லூலாவும் இந்த ஆலோசனையை முன்வைத்திருக்கிறார்.
எல்லை தாண்டுகிறார்கள்
புடாபெஸ்ட், மே 9- ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதைத் தடுக்கும் வகையில் ஐரோப்பிய ஒன்றியம் தடைகளைப் போடுவதில் எல்லையை மீறி செல்கிறார்கள் என்று ஹங்கேரியின் பிரதமர் விக்டர் ஓர்பன் குற்றம் சாட்டியுள்ளார். ரஷ்யாவில் இருந்து எண்ணெய் வாங்குவதைத் தடுத்தால், அது ஹங்கேரி மீது அணுகுண்டு வீசுவது போன்றதாகும் என்று கூறும் ஒர்பன், ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் தெரிந்தோ அல்லது தெரியாமலோ ஐரோப்பிய யூனியனின் ஒற்றுமையைக் குலைக்கும் வகையில் செயல்பட்டிருக்கிறார். ஒன்றியத்தின் புதிய முன்மொழிவை ஹங்கேரி ஏற்றுக்கொள்ளாது. இறக்குமதியை முழுமையாகத் தடை செய்வதை ஒப்புக் கொள்ள இயலாது என்று உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
நகர்மயமாக்கல் திட்டம்
பெய்ஜிங், மே 9- தனது நகர்மயமாக்கல் திட்டத்தின் பகுதிகளில் முன்னுரிமை அளித்து சில குறிப்பிட்ட நகரங்களை உருவாக்க சீனா திட்டமிட்டுள்ளது. பல்வேறு பின்தங்கிய மாகாணங்களில் உள்ள சிறு நகரங்களுக்கு முன்னுரிமை தரப்போகிறார்கள். இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் சீன அரசு வெளியிட்டிருக்கிறது. சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு இந்த நெறிமுறைகளை உருவாக்கியுள்ளது. கிராமப் புறங்களில் உள்ள இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை அளிக்கும் வகையிலும், அருகில் உள்ள நகரங்களில் அவர்கள் குடியிருக்கவும் ஏற்பாடுகள் நடக்கின்றன. இத்தகைய நகரங்களை உருவாக்குகையில் சுற்றுச்சூழலுக்கு எந்தவித குந்தகமும் விளைவிக்காமல் இருப்பதிலும் கவனம் செலுத்துகிறார்கள். இந்த நகரமயமாக்கல் நடவடிக்கைகளால் நகரங்களில் நிரந்தரமாக தங்கவைக்கப்படும் மக்களின் எண்ணிக்கை 64 விழுக்காடாக அதிகரித்துள்ளது. சிறு நகரங்களை உருவாக்கி அதில் அனைத்து அடிப்படை வசதிகளையும் உருவாக்குவதில் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது.