மணீஷ் சிசோடியாவிற்கு மீண்டும் ஜாமீன் மறுப்பு!
மதுபானக் கொள்கை தொடர்பான வழக்கில் ஊழல் குற்றம் சுமத்தப்பட்ட தில்லி அரசின் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அமைப்புக்களால் கைது செய்யப்பட்டு, தற்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர், தனக்கு ஜாமீன் கோரி மார்ச் 31 அன்று தாக்கல் செய்திருந்த மனுவை, கீழமை நீதி மன்றம் தள்ளுபடி செய்துவிட்ட நிலையில், தில்லி உயர் நீதிமன்றத்தை நாடியிருந்தார். இந்நிலை யில், தில்லி உயர்நீதிமன்றமும் மணீஷ் சிசோடியாவிற்கு ஜாமீன் மறுத்துள்ளது.
குடியரசுத் தலைவருடன் காங்கிரஸ் தலைவர்கள் சந்திப்பு
மணிப்பூர் வன்முறை குறித்து உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் உயர்மட்ட விசா ரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக, தில்லியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை, செவ்வாயன்று மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் சந்தித்த காங்கிரஸ் குழுவினர், அவரிடம் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக 12 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து கடிதம் ஒன்றையும் அளித்துள்ளனர்.
‘பதக்கங்களை கங்கையில் வீசுங்கள்; யார் வேண்டாமென்றது?’
“மல்யுத்த வீரர்கள் அவர்கள் விரும்பியதைச் செய்யலாம். அவர்கள் புனித கங்கை நதியில் தங்கள் பதக்கங்களை மூழ்கடிக்க விரும்பினால், அவர்களை நான் தடுக்கப் போவ தில்லை. ஏனெனில், இதுவரை எனது உயரதிகாரிகளிடமிருந்து எனக்கு அப்படி எந்த ஒரு உத்த ரவும் வரவில்லை. மக்கள் தங்கம், வெள்ளி, அஸ்தி என எதை வேண்டுமானாலும் கங்கை யில் போடுவதுண்டு. கங்கா தசரா தினத்தில் 15 லட்சம் மக்கள் கங்கையில் புனித நீராடுவார்கள். அத னால் நாங்கள் மல்யுத்த வீரர்கள், வீராங்கனைகளையும் அழைக்கிறோம்” என்று ஹரித்துவார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அஜய் சிங், ஆணவத்துடன் பேட்டி அளித்துள்ளார்.
மணிப்பூர் வன்முறை: உயிரிழந்தோருக்கு தலா ரூ.10 லட்சம்
மணிப்பூரில் இரு சமூகப் பிரிவினருக்கு இடையிலான மோதல், பெரும் வன்முறையாக வெடித்து, 80-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு மாநில அரசு ரூ. 5 லட்சம், ஒன்றிய அரசு ரூ. 5 லட்சம் என மொத்தம் 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் மணிப்பூர் முதல்வர் என். பைரேன் சிங் இடையிலான ஆலோ சனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும், அத்துடன், இறந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்கப்படும் என்றும் அரசு வட்டாரங்கள் கூறியுள்ளன.
கர்நாடகத்திலும் விரைவில் மகளிர்க்கு கட்டணமில்லா பயணம்
“பெண்களுக்கு இலவச பேருந்து டிக்கெட் வழங்கும் திட்டம் தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி புதன்கிழமை (மே 31) அரசிடம் முடிவை சமர்ப்பிக்க உள்ளோம். அதன் பின்னர் அமைச்சரவை கூட்டத்தில் இதுதொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்படும். நான் ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன். அது அனைத்துப் பெண்களுக்கும் அரசு பேருந்துகளில் இலவசப் பயணச் சீட்டு வழங்கப்படும். எங்கள் தேர்தல் அறிக்கையில் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள், வறுமைக் கோட்டுக்கு மேல் இருப்பவர்கள் என்ற எந்த நிபந்தனையையும் நாங்கள் தெரிவிக்கவில்லை” என்று கர்நாடக போக்குவரத்துத் துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி தெரிவித்துள்ளார்.
‘வந்தே பாரத்’ ரயில் மோதி, கேரளாவில் தொழிலாளி பலி!
கேரளத்தில் திருவனந்தபுரம் முதல் காசர்கோடு வரை ‘வந்தே பாரத்’ ரயில் இயக்கப்படு கிறது. ஏப்ரல் 25-ஆம் தேதி இந்த ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இடையே 2 முறை இந்த ரயில் கல்வீச்சுத் தாக்குதலுக்கு உள்ளானது. இந்நிலையில் திங்க ளன்று மாலை கோழிக்கோடு அருகே வந்தே பாரத் ரயில் சென்ற போது தண்டவாளத்தை கடக்க முயன்ற தொழிலாளி ஒருவர் மீது ரெயில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் அந்த இடத்தி லேயே உயிரிழந்தார்.
பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும்: அமைச்சர் சிவசங்கர்
சென்னை, மே 30- அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்படும் என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். தனியார் மூலம் அரசு போக்குவரத் துக்கழக பேருந்துகளுக்கு ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் நியமிக்கும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் போக்குவரத்து தொழிலாளர்கள் திங்களன்று (மே 29) ஒரு மணி நேரம் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் அரியலூரில் செய்தியாளர்களிடம் பேசிய போக்கு வரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவ சங்கர், போக்குவரத்து தொழிலா ளர்களின் கோரிக்கை குறித்து பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காணலாம் என தொழிற்சங்க தலைவர்களிடம் தாம் தெரிவித்ததாக கூறினார். அதன் அடிப்படையில் போராட்டம் திரும்பப் பெறப்பட்டதுடன் அனைத்து பேருந்து களும் இயக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். இந்நிலையில் சென்னையில் மே 31 அன்று தொழிலாளர் நலத்துறை ஆணையர் முன்னிலையில் போக்கு வரத்து தொழிற்சங்கத்தினர் பங்கேற் கும் முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மதிமுகவில் இருந்து விலகினார் திருப்பூர் துரைசாமி
சென்னை, மே 30- மதிமுகவின் அவைத் தலைவர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக திருப்பூர் துரைசாமி அறிவித்துள்ளார். மதிமுக கட்சியின் அவைத் தலைவராக இருந்தவர் திருப்பூர் துரைசாமி. அவர் கட்சி தலைமையுடன் ஏற்பட்ட மனகசப்பால், கடந்த மார்ச் 27 அன்று அக் கட்சியின் பொதுச் செய லாளர் வைகோவுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அந்த கடிதத்தில், மதிமுகவை திமுகவுடன் இணைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டிருந்தார். ஆனால் அவரது கோரிக்கையை மதிமுக நிரா கரித்து விட்டது. இந்த நிலையில், மே 30 அன்று திருப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய திருப்பூர் துரைசாமி, மதிமுக வின் அவைத் தலைவர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார். மேலும் இது தொடர்பாக அவர் கட்சியின் பொதுச்செயலாளர் வைகோவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.