சென்னை, ஜூன் 19 - தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட நன்மங்கலம் ஏரியை ஆக்கிரமித்து அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளதாகவும், இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்றும் அந்த பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி அளித்த கோரிக்கை மனுவுக்கு பதிலளித்த அரசு, ஆக்கிரமிப்புகள் இருப்பதாக ஒப்புக்கொண்டபோதும், அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், எனவே, ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ஸ்ரீராம் மற்றும் நீதிபதி சுந்தர் மோகன் அமர்வு, ஆக்கிரமிப்புகள் இருப்பதை ஒப்புக்கொண்ட அதிகாரிகள் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்காததில் இருந்து, ஆக்கிரமிப்பாளர் களுடன் அதிகாரிகளும் கைகோர்த்து செயல்படுவதாக தோன்றுகிறது என தெரிவித்தது. மேலும், வழக்கில் நீர்வளத்துறை செயலாளரையும், தாம்பரம் மாநகராட்சி ஆணையரையும், மின்சார வாரியத் தலைவரையும் தாமாக முன்வந்து எதிர்மனுதாரர்களாக சேர்த்த நீதிபதிகள், நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டடங்களுக்கு மின் இணைப்பு வழங்கியது எப்படி, குடிநீர் இணைப்பு வழங்கியது எப்படி என அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை 17 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.