சென்னை, நவ.11- தமிழகத்துக்கு இரு மொழிக் கொள்கையே போதுமானது என்று அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பேசிய உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி கூறினார். அண்ணா பல்கலை. வளாக கல்லூரிகளான கிண்டி பொறியியல் கல்லூரி, சென்னை தொழில்நுட்பக் கல்லூரி, அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி, கட்டிடக் கலை மற்றும் திட்ட மிடுதல் கல்லூரி, கோவை மண்டல வளாகம் ஆகியவற்றில் படித்து முடித்த மாணவர்களுக்கு பட்டம் வழங்கும் விழா சென்னை கிண்டியிலுள்ள பல்கலைக்கழக வளாகத்தில் நடை பெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து உரையாற்றிய உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, “வெளி நாடுகளில் பணிபுரிய ஆங்கிலம் தேவைப்படுகிறது. எனவேதான், இரு மொழிக் கொள்கையை வலியுறுத்தி வருகிறோம்”என்றார்.
இந்தியை படிப்பதால் எந்தப் பலனும் இல்லை. அதே நேரத்தில், சுய விருப்பத்தில் இந்தி, கன்னடம் என எந்த மொழியையும், யாரும் படிக்கலாம். எனினும், மொழித் திணிப்பை ஏற்க முடியாது. தமிழகம் இரு மொழிக் கொள்கையை விட்டுக் கொடுக்காது என்றும் அவர் கூறினார். சமஸ்கிருதம், இந்தியை வளர்க்க இந்த ஆண்டில் மட்டும் ரூ.643 கோடி செலவு செய்துள்ளது ஒன்றிய பாஜக அரசு. ஆனால், தமிழுக்கு ரூ.23 கோடி மட்டுமே ஒதுக்கியுள்ளது. தமிழ் உள்ளிட்ட மாநில மொழிக ளுக்கும் உரிய முக்கியத்துவம் தரவேண்டும் என்று ஒன்றிய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம் என்றும் அவர் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில், ஒன்றிய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன முன்னாள் செயலா ளர் டி.ராமசாமி, அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் குழும தலைமை இயக்கு நர் என்.கலைச்செல்வி, உயர்கல்வித் துறை முதன்மைச் செயலர் தா.கார்த்தி கேயன், அண்ணா பல்கலை. துணை வேந்தர் ஆர்.வேல்ராஜ், பதிவாளர் ஜி.ரவிகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.