விழுப்புரம், ஜன. 9- தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் தெரிவித்த வேண்டப்படாத சில கருத்துக்கள் அவை குறிப்பிலிருந்து நீக்கப்படுவதாகப் பேரவைத்தலைவர் அப்பாவு அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். இதுகுறித்து விழுப்புரத்தில் திங்களன்று (ஜன.9) செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக ஆளுநர் ரவி கடந்த சில மாதங்களாகவே தமிழக மக்களின் உணர்வுக்கும், பண்பாட்டுக்கும் விரோதமாகவும், கூட்டாட்சித் தத்துவத்திற்கும், அரசியல் சாசன சட்டத்துக்கும் எதிராகவும் ஒரு ஆர். எஸ்.எஸ் தொண்டர் போல கருத்துகளைத் தெரிவித்து வருகிறார். சட்டசபையில் தமிழக அரசு அளித்த அறிக்கையில் தமிழ்நாடு என்பதைத் தவிர்த்து சில வார்த்தைகளைத் தானே தன்னிச்சையாகப் பேசி உள்ளார். அதனை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நீக்கச் சொல்லி, தேவையற்ற கருத்துக்களைப் பேரவைத்தலைவர் அவையின் குறிப்பிலிருந்து நீக்கியதை சிபிஎம் வரவேற்றுப் பாராட்டு தெரிவிக்கிறது. கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிராகச் செயல்படும் ஆளுநரின் செயல்பாடுகளை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஜனவரி 20ஆம் தேதி ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளோம். மற்ற கட்சிகளையும் சேர்த்து மிகப்பெரிய ஒரு போராட்டமாக அதை நடத்த உள்ளோம் என்றார் பாலகிருஷ்ணன். அப்போது சிபிஎம் விழுப்புரம் மாவட்டச் செயலாளர் என்.சுப்பிரமணியன், முன்னாள் எம்எல்ஏ ஆர்.ராமமூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.குமார், எஸ்.முத்துகுமரன்,சே.அறிவழகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.