பெர்லின், ஏப். 22- உக்ரைனில் இருந்து வரும் அகதிகளைத் தங்க வைப்பதற்காக ஏற்கனவே அடைக்கலம் புகுந்திருக்கும் ஆப்கானிஸ்தான் அகதிகளை ஜெர்மனி வெளியேற்றுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவில் இருந்து வெளியாகும் பாரின் பாலிசி என்ற இதழ் இது குறித்த செய்தியை வெளியிட்டிருக்கிறது. தலிபான் ஆட்சியின் கொடுமைகளில் இருந்து தப்பித்து ஜெர்மனியில் ஏராளமான ஆப்கன் மக்கள் அடைக்கலம் புகுந்தனர். இவர்களில் பலர் மூன்று ஆண்டுகள் ஜெர்மனியில் தங்குவதற்கு உரிமத்தைப் பெற்றுக் கொண்டனர். இவர்களில் பெரும்பாலானவர்களின் வாழ்க்கை நல்ல முறையில் நகரத் துவங்கியது. ஆனால் பெர்லினில் உள்ள பல மையங்களுக்கு உக்ரைனில் இருந்து அகதிகள் வரத்துவங்கினர். அவர்களை தங்க வைப்பதற்காக ஏற்கனவே இருந்த ஆப்கன் அகதிகளை வெளியேறுமாறு ஜெர்மனி நிர்வாகம் உத்தரவிட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
ஜெர்மனியைச் சேர்ந்த பல தொண்டு நிறுவனங்களும் இந்தப் பிரச்சனையில் கடுமையான விமர்சனங்களை வெளியிட்டுள்ளன. ஆப்கன் அகதிகளை வெளியேறுமாறு கூறிய செய்திகளை ஜெர்மனி அரசு மறுக்கவில்லை. சில நேரங்களில் இதுபோன்ற கடினமான முடிவுகளை எடுக்க வேண்டிவரும் என்று தொழிலாளர் மற்றும் சமூகசேவைகள் அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. பெண்கள் மற்றும் குழந்தைகள் என்று ஏராளமானவர்கள் உக்ரைனில் இருந்து ஜெர்மனிக்கு வருவதை அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்கள். ரஷ்யாவின் நடவடிக்கை தொடங்குவதற்கு முன்பாகவே, உக்ரைனில் இருந்து அகதிகள் ஜெர்மனிக்கு வந்தனர். தற்போது வரையில் 12 லட்சத்து 40 ஆயிரம் பேர் அங்கிருந்து வந்திருக்கிறார்கள். போருக்குப் பின்னர், போலந்து நாட்டுக்கு அதிகமான அகதிகள் சென்றுள்ளனர். அந்த நாட்டில் தற்போது வரையில் 28 லட்சம் பேர் உக்ரைனில் இருந்து அகதிகளாக இடம் பெயர்ந்திருக்கிறார்கள்.