states

img

மகாகவி பெய்ஸ் அகமது பெய்ஸ்

மோடி அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தில்லி ஷாகீன் பாக்கில் துவங்கி குமரி முனை வரை நடைபெற்ற  மிகப்பெரும் எழுச்சி மறக்க முடியாதது. அந்த எழுச்சிப்  போராட்டத்தில் வடமாநிலங்களில் இடம்பெற்ற உணர்ச்சி மிகு பாடல் ஒன்று ‘ஹம் தேகேங்கே’ என்பதாகும். மாபெரும் மலை போன்று அடக்குமுறைகள் நம்மை அழுத்தினாலும் நிச்சயம் அதை உடைத்து நொறுக்குவோம்; நாம் வெல்வோம் என்பதே அந்தப் பாடலின் கருப்பொருளாகும். அந்தக் கவிதையை 1970களில் பாகிஸ்தானின் ராணுவ சர்வாதிகாரி ஜியா உல் ஹக்கின் அடக்குமுறை ஆட்சிக்கு எதிராக எழுதியவர்தான் பெய்ஸ் அகமது பெய்ஸ். அன்று முதல் இன்று வரை போராட்டக் களங்களில் எழுச்சியூட்டும் பாடலாக முழங்கப்படுகிறது இந்த உருதுக் கவிதை. பெய்ஸ் அகமது பெய்ஸ் ஒரு மகத்தான கம்யூனிஸ்ட். மாபெரும் மார்க்சிஸ்ட். 20ஆம் நூற்றாண்டில் இந்திய துணைக் கண்டத்தில் தோன்றிய மகாகவிகளில்  ஒருவர். உலகில் இடதுசாரி இயக்கங்கள் தந்த கவிஞர்களில் பாப்லோ நெருடாவிற்கு இணையாக மதிக்கப்படுபவர் பெய்ஸ் அகமது பெய்ஸ். பாப்லோ நெருடா, கேப்ரியேல் கார்சியா, மகாகவி பாரதி ஆகியோர் வரிசையில் புரட்சிகர கவிதை களைப் படைத்தவர் பெய்ஸ்.உருதுமொழியில் என்றென்றும் தனக்கென்று தனித்த அடையாளத்தையும் முத்திரையையும் பதித்தவர் பெய்ஸ். உருதுமொழிக்கு உரிய சிறப்பான கஜல் வடிவ பாடல்களில் சமகாலப் பிரச்சனைகளை, அவலங்களை, எளிய மக்களின் கோபக் கனலை, போராட்டங்களை உணர்ச்சித் தெறிக்க, மார்க்சிய அழகியலுடன் வடித்தெடுத்தது மட்டுமல்ல, லட்சோப லட்சம் மக்களின் மனங்களில் அந்த புரட்சிகர கவிதைகள் கனன்று எரியச் செய்தவர் பெய்ஸ்.

ஒன்றுபட்ட இந்தியாவில் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை உருவாக்கிய தலைவர்களில் ஒருவர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னோடிகளில் ஒருவர். வாழ்நாள் முழுவதும் போராளியாய், கலகக்காரராய் இருந்த பெய்ஸ், கவிதை வேறு, வாழ்க்கை வேறாக வாழத் தெரியாதவர். மரணம் அடையும் வரை மார்க்சிஸ்ட்டாகவே செங்கொடியை உயர்த்திப் பிடித்தவர். ஆசியாவில் ஏகாதிபத்தியத்தின் ஆதிக்கத்தை மிக நுட்பமான முறையில் ஆய்வு செய்து எழுதியவர். ஆசிய நாடுகளில் ஏகாதிபத்தியத்தின் வல்லாதிக்கம் என்பது வெறுமனே அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவது மட்டுமல்ல; ஆசிய நாடுகள் அனைத்திலும் சமூக மற்றும் கலாச்சார அடிமைத்தனத்தை உருவாக்குவதில் தீவிர முனைப்போடு செயல்படுகிறது. அது ஒருபுறம் நமது நாடுகளின் நல்ல பண்புகளை, முற்போக்கு விழுமியங்களை, பழைய நிலபிரபுத்துவ அமைப்பிலிருந்து வெளியேறத் துடிக்கும் புரட்சிகர மாண்புகளை, அது சார்ந்த கலைகள், இலக்கியங்கள், மனிதநேய மாண்புகளை கொன்று அழிக்கத் துடிக்கிறது; மறுபுறத்தில் நிலப்பிரபுத்துவ அழுக்குகளை, கொடூரங்களை, பிற்போக்குத் தனத்தை, அறியாமையை, மூடப்பழக்க வழக்கங்களை அடிமைத்தனத்தை, வர்க்கச் சுரண்டலை முழுமையாக நீடித்து நிலைபெறச் செய்ய முயற்சிக்கிறது என்று எழுதியவர் பெய்ஸ். தோழர் பெய்ஸ் அகமது பெய்ஸ், இன்றைய பாகிஸ்தானின் சியால்கோட்டில் 1911 பிப்ரவரி 13ல் பிறந்தவர். லாகூரில் 1984 நவம்பர் 20ல் மறைந்தார்.