states

தீக்கதிர் விரைவு செய்திகள்

ரிசர்வ் வங்கிக்கு வெடிகுண்டு மிரட்டல்

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இருக்கும் ரிசர்வ் வங்கிக்கு, வங்கியின் வாடிக்கையாளர் சேவை எண்ணின் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மிரட்டல் விடுத்த நபர் தன்னை லஷ்கர்-இ-தொய் பாவின் தலைமைச் செயல் அதிகாரி என்று அடையாளப்படுத்திக் கொண்டு ரிசர்வ் வங்கியை வெடிகுண்டு மூலம் தகர்க்கப் போவதாக மிரட்டி ஒரு பாட லையும் பாடியுள்ளார். இந்த வெடிகுண்டு  மிரட்டல் தொடர்பாக மும்பை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, மிரட்டல் விடுத்த நபரை தேடி வருகின்றனர்.

தில்லியில்  தீவிரமடையும் காற்று மாசு 107 விமானங்கள் காலதாமதம்

தில்லியில் காற்று மாசு காரணமாக, காற்றின் தரம் மிக மோசமான நிலைக்குச் சென்றுள்ளது. நகரின் பெரும்பாலான பகுதிகளில் காற்று தரம்  400 புள்ளிகளை தாண்டியுள்ளது. இத னால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.  இந்நிலையில், காற்று மாசு காரண மாக தில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் 800 மீட்டருக்கு குறைவான தொலைவையே பார்க்க கூடிய நிலை காணப்பட்டது. இதனால் 107  விமானங்கள் வருகை மற்றும் புறப்பாடு ஆகியவற்றில் காலதாமதம் ஏற்பட்டது. மேலும் 3 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டு உள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளது.

தோழர் மா.ச.முனுசாமி மறைவுக்கு சிபிஎம் மாநிலச் செயற்குழு இரங்கல் 

சென்னை,நவ.17- தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் ஸ்தாபகத் தலைவர்களில் ஒருவரான தோழர் மாச.முனுசாமி மறை வுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு இரங்கல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி வருமாறு: தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்  கூட்டணியின் ஸ்தாபகத் தலைவர்களில் ஒருவரான தோழர் மா.ச. முனுசாமி அவர்கள் வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவால் ஞாயிறன்று உயிரிழந்தார் என்ற செய்தி  மிகுந்த வேதனையளிக்கிறது. அவரது மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. தோழர் மா.ச. முனுசாமி  செங்கல்பட்டு மாவட்டம், கருங்குழி பகுதியைச் சேர்ந்த  பள்ளி ஆசிரியர். தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி உருவான போது அதன் ஸ்தாபக தலைவர்களில் ஒருவராக வும், மாநில பொருளாளர், மாநிலத் தலை வர் என பல்வேறு பொறுப்புகளிலிருந்து சிறப்பாக பணியாற்றியவர். தமிழ்நாடு முழுவதும் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் களின் நலன்களுக்காக பல்வேறு போராட்டங்களை முன்னின்று நடத்தி பல வெற்றிகளையும் கண்டவர். ஓய்வு பெற்ற ஆசிரியர் சங்கத்தின் நிர்வாகியாகவும் சிறப்பாக பணியாற்றியவர். அவரது மறைவு ஆசிரியர்கள் இயக்கத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பாகும். அவரை பிரிந்து வாடும் அன்னா ரது மகன்கள், மகள் மற்றும் குடும்பத்தி னருக்கும், உறவினர்களுக்கும், ஆசிரியர் இயக்க தோழர்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.

பெகட்ரான் ஆலையை வாங்கியது  டாடா 

சென்னை,நவ.17-  பெகட்ரான் ஆலையை டாடா நிறுவனம் வாங்கியது. ஸ்ரீபெரும்புதூர் பெகட்ரான் ஆலையின் 60 சதவீத பங்குகளை டாடா எலக்ட்ரானிக்ஸ் வாங்கியது. 40 சதவீத பங்குகள் பெகட்ரான் நிறுவனத்திடமே இருக்கும் என்று தெரிவித்துள்ளது.  ஐபோன் தயாரிப்புக்காக ஏற்கனவே 2 நிறுவனங்களை டாடா வாங்கிய  நிலையில், இந்நிறுவனத்தையும் தற்போது கையகப்படுத்தியுள்ளது.

2 ஆண்டுகளாக ஆர்டிஇ  பள்ளிக் கட்டணம் வழங்கவில்லை தனியார் பள்ளிகள் கூறுகின்றன

திருச்சி,நவ.17- தனியார் பள்ளிகளில் ஆர்டிஇ கல்விக் கட்டணம் 2 ஆண்டுகளாக வழங்கப்பட வில்லை; அரசு இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைபப்பின் மாநில செயற்குழுக் கூட்டம் திருச்சிராப்பள்ளியில் நடைபெற்றது.  இலவச கட்டாயக் கல்விக் கட்டணம் 2 ஆண்டுகளாக பள்ளிகளுக்கு வழங்கப்படாததால் பள்ளிகள் மிகுந்த நிதி நெருக்கடியில் உள்ளன. இதனால் தனியார்  பள்ளிகள் சுமூகமாக செயல்பட இயலாத நிலை உள்ளது. சுமார் 8 ஆயிரம் தனியார் பள்ளிகளில் இலவச கட்டாயக் கல்வித் திட்டத்தின் கீழ் எல்கேஜி முதல் 8 ஆம் வகுப்பு  வரை படித்து வரும் சுமார் 4.5 லட்சம் மாணவர்களின் 2023 -24 மற்றும் 2024-25 ஆம் கல்வி  ஆண்டுகளுக்கான சுமார் 1,000 கோடி கல்விக் கட்டணத்தை விரைவில் பள்ளிகளுக்கு வழங்க வேண்டும். இந்த தொகை வழங்க தாமதமாவதால் சுமார் 2 லட்சம் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு சரிவர சம்பளம் வழங்க இயலாத நிலை மற்றும் பள்ளிகளுக் கான அத்தியாவசிய செலவினங்களை கூட செய்ய இயலாத நிலை உள்ளது. பள்ளிகளில் பாடத்தில் மட்டும் அல்லாது விளையாட்டுகளிலும் மாணவர்களையும் தமிழ்நாடு அரசு ஈடு படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நடிகை கஸ்தூரிக்கு நீதிமன்றக் காவல்

சென்னை, நவ.17- தெலுங்கு பேசும் மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் தலைமறைவாக இருந்து ஹைதராபாத்தில் கைது செய்யப்பட்ட நடிகை கஸ்தூரி, ஞாயிற்றுக்கிழமை (நவ.17) சென்னை சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டார். விசாரணைக்கு பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.  கஸ்தூரியை நவம்பர் 29 வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது.இதனையடுத்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

நவ. 28, 29 விழுப்புரத்தில்  முதல்வர்  கள ஆய்வு

சென்னை,நவ.17- நவம்பர் 28, 29 ஆகிய தேதிகளில்  விழுப்புரம் மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் களஆய்வு மேற்கொள்கிறார்.  திமுக தொண்டர்களுக்கு அவர் எழுதிய கடிதத்தில். மக்கள் அளித்த உறுதியையும், அவர்கள் காட்டுகின்ற பாசத்தையும் பார்த்து பரவச மடைந்ததுடன், மக்களுக் கான திட்டங்கள் சரியாகப் போய்ச் சேர வேண்டியதை இத்தகைய கள ஆய்வுகள் மூலம் உறுதி செய்வதன் அவசியத்தையும் உணர்ந்தேன். இரு மாவட்ட அரசுத் திட்டங்களின் ஆய்வுப் பணிகளையும், கழகத்தின் ஆக்கப் பணி களையும் நிறைவு செய்து, அரியலூர் -பெரம்பலூர் மக்கள் தந்த நம்பிக்கையால் மனநிறைவுடன் நவம்பர் 15 அன்று இரவு சென்னை வந்து சேர்ந்தேன். நவம்பர் 28, 29 ஆகிய தேதிகளில் விழுப்புரம் மாவட்டத்திற்குச் செல்ல இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.