states

நமது ஆய்வு! - அ.அறிவுக்கடல்

ஸ் டேட் வங்கி வெளியிட்ட தரவுகளில், பத்திரங்களை வாங்கியவர்கள் பட்டியல் தனியாகவும், பெற்ற கட்சிகளின் பட்டியல் தனியாகவும் பிடிஎஃப் கோப்புகளாகத் தரப்பட்டிருந்தன. அவற்றை ஸ்ப்ரெட்ஷீட்(எக்செல்) கோப்பாக மாற்றி, பின் இரண்டையும் பொருத்தியதில், 18,741 பத்திரங்களுக்கு வாங்கியவர்கள், பெற்றவர்கள் விபரங்களைப் பொருத்த முடிந்தது. அதன்பின், வாங்கியவர்கள், பெற்றவர்கள், வாங்கிய தேதி என்ற அடிப்படையில் வரிசைப் படுத்தி, ஒவ்வொரு நிறுவனமும் எந்தெந்த தேதிகளில் பாஜகவுக்கு நிதியளித்திருக்கின்றன என்ற தொகுப்பை உருவாக்கினோம். அதன்பின், பெரிய தொகை அளித்திருக்கிற நிறுவனங்களைப் பற்றி ஊடகங்களில் வந்த செய்திகளின் அடிப்படையில், அவற்றின்மீது மத்திய முகமைகள் நடவடிக்கை மேற்கொண்ட தேதிகள், அவற்றுக்கு அண்மையில் அவை பாஜகவுக்கு அளித்த நிதிகள் என்று பொருத்தினோம். அதைப் போலவே, அதிகக் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான நிறுவனங்கள் அளித்த நிதிகளையும் பொருத்தினோம்.  தேர்தல் பத்திரங்கள் தவிர நேரடியாகவும், தேர்தல் அறக்கட்டளை மூலமாகவும் பாஜக பெற்றிருக்கிற நிதிகள் பற்றிய தகவல்கள், தேர்தல் ஆணையத்துக்கு அக்கட்சி ஆண்டுதோறும் அளிக்கிற கணக்கிலிருந்து எடுக்கப்பட்டன. அவற்றை ஆய்வு செய்வது சாத்தியமாக இல்லை. ஏனென்றால் அவையும் பெரிய பட்டியலாகவும், ஒரே மாதிரி அல்லாத தரவுகளாகவும் இருந்தன. உதாரணமாக 31.3.2023இல் முடிந்த 2022-23 நிதியாண்டில் பெற்ற நிதிகள் குறித்த தகவல்களை, ஆறு மாதங்கள் கழித்து, 2023 அக்டோபர் 31இல் பாஜக சமர்ப்பித்திருக்கிறது. பக்கத்துக்கு 20-25 நன்கொடையாளர்களுடன், 440 பக்கங்கள் கொண்ட பட்டியல் பிடிஎஃப் கோப்பாக உள்ளது. இப்படி ஒவ்வோராண்டுக்கும் உரியவற்றை ஆய்வு செய்வதில் இருந்த சிரமங்களால், அவை குறித்த தகவல்களை தி வயர், நியூஸ்லாண்டரி, ஸ்க்ரோல் போன்ற தளங்கள் வெளியிட்டவற்றிலிருந்து எடுத்துக்கொண்டோம். இவ்வளவுக்குப் பின்னும், இது முழுமையான ஆய்வு அல்ல. எல்லா நிறுவனங்களைப் பற்றியும் ஆய்வு செய்ய முடியவில்லை என்பது ஒருபுறம் என்றால், பத்திரங்களை வாங்கியவர்கள் பற்றிய விபரங்கள் இன்றி பெற்ற கட்சிகளின் விபரங்கள் மட்டுமே இருந்த பத்திரங்கள் 1,680ம் அந்தப் பட்டியலில் உள்ளன. அது மட்டுமின்றி, யாரும் மாற்றாமல் காலாவதியான பத்திரங்களின் மதிப்பு ரூ.9.63 கோடி. அவ்வளவு தொகை மாற்றப்படாமல் விடப்பட்டதற்கும் காரணங்கள் இருக்கும் என்றே தோன்றுகிறது. மாற்றாமல் காலாவதியானவற்றில் வேதாந்தா போன்ற நிறுவனங்கள் வாங்கிய பத்திரங்களும் உள்ளன என்பது அந்த சந்தேகத்தை அதிகரிக்கிறது. பாஜகவின் ஊழல்கள் என்ற மாபெரும் பூதத்தின் சிறு பகுதியையே நம் ஆய்வுகளால் கண்டுபிடிக்க முயற்சித்திருக்கிறோம்!