states

img

அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதமான இட ஒதுக்கீடு! - சிபிஎம் வரவேற்பு

அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதமான இட ஒதுக்கீடு
வழங்கப்படுவதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்றுள்ளது. இது குறித்து கட்சியின்
மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது

மருத்துவ கல்லூரிகளில் உள்ள இடங்களில் 15 சதமான இடங்களை மத்திய
தொகுப்புக்கு ஒன்றிய அரசு எடுத்து கொண்டது. இந்த இடங்களுக்கு இதர
பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டினை இதுவரையில் ஒன்றிய
அரசு வழங்கவில்லை. இதனால் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினை சார்ந்த சுமார்
10 ஆயிரம் பேர் மருத்துவக் கல்லூரியில் சேருவதற்கான வாய்ப்பு பறிபோய்
விட்டது.
இந்நிலையில் கடந்தாண்டு திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட
அனைத்து கட்சிகளும் உச்சநீதிமன்றத்திலும், சென்னை உயர்நீதிமன்றத்திலும்
அகில இந்திய ஒதுக்கீடு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 50
சதமான இடஒதுக்கீடு வழங்கிட வேண்டுமென வழக்குகள் தொடுக்கப்பட்டன.
இவ்வழக்கினை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அகில இந்திய ஒதுக்கீடு
இடங்களில் இடஒதுக்கீடு வழங்கிட வேண்டுமெனவும், இதுகுறித்து முடிவெடுக்க
ஒரு குழு அமைக்க வேண்டுமெனவும் கடந்தாண்டு தீர்ப்பு வழங்கியது.
இத்தீர்ப்பை அமல்படுத்தாத நிலையில், மீண்டும் உயர்நீதிமன்றத்தை அணுகி
இந்தாண்டுக்குள்ளாவது உத்தரவை நிறைவேற்றிட வற்புறுத்தினோம். சென்னை,
உயர்நீதிமன்றம் ஒருவாரத்திற்குள் ஒன்றிய அரசு முடிவெடுத்து அறிவிக்க
வேண்டுமென உத்தரவிட்டது. இந்நிலையில் இன்று ஒன்றிய அரசு அகில இந்திய
ஒதுக்கீட்டிற்கான மருத்துவ இளங்கலை படிப்பிலும், முதுகலை படிப்பிலும்,
உயர்தனி வகுப்புகளிலும் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதமான இடஒதுக்கீடு
வழங்கப்படும் என மத்திய அமைச்சரவை முடிவெடுத்துள்ளதாக செய்திகள்
வந்துள்ளன.

கடந்த பல்லாண்டுகளாக நடத்தப்பட்டு வந்த சட்டப்போராட்டத்திற்கு
கிடைத்துள்ள முதல்கட்ட வெற்றி இது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
சுட்டிக்காட்ட விரும்புகிறது. அதேசமயம், அகில இந்திய ஒதுக்கீடு இடங்களில்
அந்தந்த மாநிலத்தில் உள்ள இடஒதுக்கீடு கொள்கை அமலாக்க வேண்டுமென்கிற
அடிப்படையில் தமிழகத்தில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதமான
இடஒதுக்கீடு வழங்கிட வேண்டுமென நீதிமன்றத்தில் வற்புறுத்தியுள்ளோம்.
தற்போது ஒன்றிய அரசு 27 சதமான இடஒதுக்கீட்டை மட்டும் அறிவித்துள்ளது
வரவேற்கத்தக்கது என்ற போதிலும், தொடர்ந்து 50 சதமான இடஒதுக்கீட்டினை
பெறுவதற்கு அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டுமென
வற்புறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.

;