states

img

இரண்டாம் கட்ட 100 நாளில் நூறு திட்டம்.... புத்தாண்டு பரிசாக பத்து திட்டங்கள்.... பினராயி விஜயன் அரசு அறிவிப்பு....

திருவனந்தபுரம்:
புத்தாண்டு பரிசாக கேரளத்தில் எல்டிஎப் அரசு இரண்டாம் கட்ட 100 நாள் நூறு திட்டங்களின் பகுதியாக, வெளிநாடு வாழ்வோருக்கு 15 நாட்களுக்குள் சான்றிதழ், முதியோருக்கு வீடுதேடி வரும் அரசு சேவைகள், சமூகநல ஓய்வூதியம், உணவுப் பொருட்கள் அதிகரிப்பு உள்ளிட்ட பிரபலமான பத்து புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து முதல்வர் பினராயி விஜயன் செய்தியாளர் கூட்டத்தில் கூறியதாவது: சேவையைப் பெறவோ அல்லது பிரச்சனையை அரசாங்கத்திற்கு தெரிவிக்கவோ இல்லாத வயதானவர்களுக்கான சேவை முக்கியமானது. கேரள சமுதாயத்தில் முதியோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது நமது மக்கள் தொகை கட்டமைப்பின் இயல்பான பரிணாமம் ஆகும். பலரது குழந்தைகளும் உறவினர்களும் அவர்களுக்கு அருகில் இல்லை. அரசாங்க அலுவலகத்திற்கு நேரடியாகச் செல்லாமல் அரசாங்கத்திடமிருந்து சலுகைகளைப் பெற அல்லது பிரச்சனைகளை எழுப்ப ஏற்பாடுகள் செய்யப்படும். முதல் கட்டமாக ஜனவரி 10 ஆம் தேதிக்கு முன்பு 5 சேவைகள் அவர்களுக்கு வழங்கப்படும்.அதில் பதிவேடு பராமரிப்பு, ஆயுள் சான்றிதழ்கள், சமூக பாதுகாப்பு ஓய்வூதிய விண்ணப்பங்கள், சிஎம்டிஆர்எப் உதவி, அத்தியாவசிய உயிர் காக்கும் மருந்துகள் ஆகியவை அடங்கும். படிப்படியாக, தேவையான அனைத்து சேவைகளையும் வீட்டிலேயே வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். ஆன்லைனில் விண்ணப்பிப்பது கடினம் எனில், வீட்டிற்குச் சென்று புகார்களைப் பெறுவதற்கும், அவற்றின்தொடர் நடவடிக்கை குறித்து அதிகாரிகளுக்குத் தெரிவிப்பதற்கும் ஒரு அமைப்பு உருவாக்கப்படும்.

இதற்காக, சமூகத் தொண்டர்களின் சேவைகள் உள்ளாட்சி அமைப்பு மூலம் பயன்படுத்தப்படும். உள்ளாட்சி அமைப்புகள் இப்பகுதியில் உள்ள தன்னார்வலர்களுக்கு 65 வயதுக்கு மேற்பட்டவர்களின் வீடுகள், குறிப்பாக மற்றவர்களின் உதவியின்றி வாழும் வீடுகள் அல்லது மாற்றுத்திறனாளிகள் குறித்த விவரங்களை அப்பகுதில் உள்ள சமூகத்தொண்டர்களிடம் உள்ளாட்சி அமைப்புகள் தெரிவிக்கும். வீட்டுக்கு நேரடி வருகைகள் மூலம் அரசின் சேவை தேவையா என்று விசாரித்து, மேற்கண்ட சேவையை கிடைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும். இத்திட்டம் ஜனவரி15 ஆம் தேதி தொடங்கும் என முதல்வர் கூறினார்.

இதர திட்டங்கள்
ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்திற்கும் குறைவாக உள்ள குடும்பங்களில் இருந்து 1000 திறமையான பட்டதாரி மாணவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கப்படும், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு எமினென்ட் ஸ்காலர்ஸ் ஆன்லைன் திட்டத்தில், தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு பல்வேறு துறைகளில் உலகப் புகழ்பெற்ற ஆளுமைகளுடன் பேசுவதற்கான வாய்ப்பை வழங்குகிறது. பொதுத்துறை மற்றும் அரசுசேவைகளில் ஊழலை ஒழிக்க ஊழல் இல்லாத பொது சேவை திட்டம் தொடங்கப்படும். ஊழல் பற்றிய தகவல்களை ஆன்லைனில் ரகசியமாக தெரிவிக்கலாம்.

குழந்தைகள் தற்கொலை செய்வதைத் தடுக்கவும், பெண்களின் அவல நிலையை போக்கவும் ஆலோசனை வழங்கும் ஏற்பாடுகள் விரிவுபடுத்தப்படும். இரத்த சோகை உள்ள குழந்தைகளுக்கு நோய் கண்டறியப்பட்டு ஊட்டச்சத்து வழங்கப்படும். சுற்றுச்சூழல் நட்பு கட்டுமானத்தை ஊக்கப்படுத்துவதற்காக பசுமை கட்டிட வரி மீதானஒரு முறை தள்ளுபடி அறிமுகப்படுத்தப்படும். சமூக ஊடகங்களில் போலி செய்திகள் மற்றும் அவதூறான பிரச்சாரங்களை அடையாளம் காணவும், பெரியவர்களுக்கு காலைநடைப்பயிற்சி மற்றும் குழந்தைகள் விளையாடுவதற்கும் ஒவ்வொரு கிராமத்திலும் ‘சத்தியமேவா ஜெயதே’ என்ற டிஜிட்டல் / ஊடக கல்வியறிவு திட்டம் ஏற்பாடு செய்யப்படும். வெளிநாடுகளிலிருந்து ஊர் திரும்பிய வர்களுக்கு அரசு ஆவணங்கள் கோரிய 15 நாட்களுக்குள் அவை வழங்கப்படும்.

உயர் படிப்புக்கு ரூ.1 லட்சம் மானியம்
நிதி பற்றாக்குறையால் உலகத் தரம்வாய்ந்த கல்வி மையங்களில் உயர் கல்வியைத் தொடர முடியாத மாணவர்களுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும். முதல்வரின் மாணவர் திறமை மானியத் திட்டம் என்கிற பெயரில் ஆண்டு வருவாய் ரூ .2.5 லட்சத்துக்கும் குறைவான குடும்பத்தைச் சேர்ந்த 1,000 ணவர்களுக்கு வழங்கப்படும். அந்த தொகை அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். இதற்கான தகுதி மதிப்பெண்கள்/ தரத்தின் அடிப்படையில் இருக்கும்.உலகத் தரம் வாய்ந்த உயர்கல்வி மையங்களை பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களால் அணுக முடியாது என்பது நமக்குஒரு சிக்கலான பிரச்சனையாகும். தனியார் மயமாக்கல் கொள்கைகள் இதற்கு முக்கிய காரணம். இதிலிருந்து கேரளா வேறுபட்டது. இவ்வாறு முதல்வர் பினராயி விஜயன் கூறினார்.

;