பாலக்காடு, ஜுலை 8- பாலக்காடு மருத்துவக் கல்லூரி மாணவர் சங்க தேர்தல் முடிவுகள் இந்திய மாணவர் சங்கத்தின் மீதான நம்பிக்கையை வலுப்படுத்தியுள்ளது. ஒன்றிய அமைச்சர் சுரேஷ்கோபி நேரடியாக தலையிட்ட போதிலும் எஸ்எப்ஐ மிகப்பெரிய பெரும்பான்மையுடன் 13 இடங்களையும் கைப்பற்றியது.
பாஜக ஒன்றிய அமைச்சர் தலையிட்டும் பலனில்லை
எஸ்.எப்.ஐ., தலைமையிலான மாணவர்கள் நடத்தும் போராட்டத்தை அரசியல் ஆதாயத்துக்கு பயன்படுத்த காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வி.கே.ஸ்ரீகண்டன் முயன்றார். இருதினங்கள் முன்பு பாலக்காடு வந்த ஒன்றிய அமைச்சர் சுரேஷ் கோபி மாணவர்களை தவறாக வழிநடத்தும் வகையில் பேசினார். எஸ்எப்ஐ பெற்றுள்ள இந்த வெற்றி அவர்களுக்கு ஏற்பட்ட பின்னடைவாகும்.
பல்கலைக் கழகத்தில் ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளிட்ட குறைபாடுகளால் மாணவர்கள் தவித்தபோது, போராட்டத்தை முன்னின்று நடத்தி கோரிக்கைகளை நிறைவேற்றியது எஸ்.எப்.ஐ. அதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த முயன்றவர்களை மாணவர்கள் அடையாளம் காட்டினர். மேலும் மருத்துவக் கல்லூரியின் வளர்ச்சிக்காக அரசு மேற்கொண்ட தலையீடுகளை மாணவர்களால் புரிந்து கொள்ள முடிந்தது என்பதையே இந்த வெற்றி காட்டுகிறது. மாணவர்களை முன்னிறுத்தி மக்களை அரசுக்கு எதிராக மாற்றும் நடவடிக்கை தோல்வியடைந்துள்ளது. மருத்துவக் கல்லூரி மாணவர்கள் நடத்திய போராட்டத்தை அப்போது அமைச்சராக இருந்த கே.ராதாகிருஷ்ணன் முடித்து வைத்தார். அமைச்சர் அளித்த உறுதியின்படி, ஆசிரியர் பணிக்கு மாற்றுப்பணி அடிப்படையில் பணி நியமனம் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன் நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன.
ஆபரேஷன் தியேட்டர், உள்நோயாளிகள் பிரிவு போன்ற அடிப்படை வசதிகள், நிரந்தர ஆசிரியர் நியமனம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ்எப்ஐ தலைமையில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். ஒரு மாதத்திற்குள் கல்லூரியின் அறுவை சிகிச்சை அரங்கம் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என்றும் அமைச்சர் உறுதியளித்தார். மேலும், மாவட்ட மருத்துவமனையின் அறுவை சிகிச்சை அரங்குகளை மாணவ, மாணவியர் பார்வையிட அனுமதி வழங்கவும் முடிவு செய்யப்பட்டது. அவை அனைத்தும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
எஸ்எப்ஐக்கு எதிராக கட்டமைக்கப்பட்ட அனைத்து பொய்களையும் மாணவர்கள் அழித்து ஒழித்து வருகின்றனர். ஊடகம் மற்றும் கேஎஸ்யு வின் சூழ்ச்சியை உணர்ந்து அவர்கள் உண்மையின் பக்கம் நின்றனர். மருத்துவப் பல்கலைக்கழக மாணவர் சங்கத் தேர்தலில், பெரும்பாலான கல்லூரிகளில் எஸ்எப்ஐ ஆதிக்கம் செலுத்தியது குறிப்பிடத்தக்கது.