states

img

கேரளத்தில் மீண்டும் இடதுசாரி ஆட்சி நாட்டிற்கு அவசியம்: பி.ராஜீவ்....

திருவனந்தபுரம்:
பல்வேறு மாநிலங்களில் நடைபெறவிருக்கும் சட்டப் பேரவைத் தேர்தல்களில் மதச்சார்பற்ற ஜனநாயக இந்தியா நம்பிக்கையுடன் சிறிய கேரளாவைப் பார்க்கிறது. நாட்டில் வளர்ந்து வரும் சர்வாதிகாரப் போக்குகளுக்கு எதிரான திசையை தீர்மானிப்பதில் வலுவான இடதுசாரிகளின் ஆட்சித் தொடர்ச்சி ஒரு தவிர்க்க முடியாத முன்நிபந்தனையாக ஜனநாயக சமூகம் கருதுகிறது என்று சிபிஎம் கேரள மாநில செயற்குழு உறுப்பினர் பி.ராஜீவ் கூறினார்.

கேஎஸ்டிஏ மாநில மாநாட்டின் பொதுக் கூட்டத்தில் அவர் மேலும் பேசியதாவது: நாட்டின் அரசியலமைப்பைப் பாதுகாப்பதற்கும் மதச்சார்பற்ற ஜனநாயகத்தின் உள்ளடக்கத்தைப் பாதுகாப்பதற்கும் பெரும் போராட்டத்திற்கு இடதுசாரிகளின் வெற்றி அவசியம். நாட்டில் ஒரு சிறப்பு சூழ்நிலையில் நாம் வாழ்கிறோம். நீங்கள் கேரளாவில் இருக்கும்போது, அதை உடனடியாக புரிந்து கொள்ள முடியாமல் போகலாம். விவசாயப் போராட்டத்திற்கு ஒருமைப்பாடு தெரிவித்து, சமூக பாதுகாப்பின் ஒரு பகுதியாக இருந்ததற்காக 22 வயது பெண் சிறையில் அடைக்கப்பட்டார். இதுபோல் நூற்றுக்கணக்கானோர்  சிறையில் உள்ளனர். தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 66 ஏ ரத்து செய்யப்பட்ட போதிலும், இன்னும் பழமையான நடைமுறைகள் மூலம் கருத்துச் சுதந்திரம் ஒடுக்கப்படுகிறது.

ஜனநாயகத்திற்குள் சர்வாதிகாரத்திற்கான போக்கு அதிகமாக இருப்பதாக தனது வரைவு அரசியலமைப்பில், அம்பேத்கர் எச்சரித்திருந்தார். சமூகம் கூடுதல் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று கூறிய அவர் அரசமைப்பு அறநெறி குறித்தும் நினைவு கூர்ந்தார்.  அரசமைப்பின் ஒழுங்கமைப்பு என்பது ஜனநாயக அரசமைப்பின் அமைதியான செயல்பாட்டிற்கு தேவையான முன்நிபந்தனையாகும். இதில் இரண்டு காரணிகளை கவனிக்க வேண்டும் என்று அம்பேத்கர் சுட்டிக்காட்டினார். முதலாவதாக, அரசமைப்பின் சாரத்துடன் ஆட்சி ஒத்துப்போக வேண்டும். இரண்டாவதாக, அரசியலமைப்பைத் திருத்தாமல் அதன் பயன்பாட்டின் மூலம் அதைத் தகர்த்துவிடலாம். அம்பேத்கர் கொடுத்த எச்சரிக்கை இப்போது செயல்படுத்தப்படுகிறது. அரசமைப்பால் வழங்கப்பட்ட அடிப்படை சுதந்திரங்களை பறிப்பது நடைமுறையின் மூலம் கொண்டு வரப்படுகிறது.

  அரசமைப்பில் விவசாயம் ஒரு மாநில விஷயமாக இருந்தாலும் விவசாயிகளுக்கு எதிரான கொள்கைகளை மத்திய அரசு செயல்படுத்துகிறது. கூட்டாட்சி என்பது அரசமைப்பின் அடிக்கல்லாக இருந்தாலும், நடைமுறையில் அது சர்வாதிகாரத்திற்கும் அதிகார மையப்படுத்தலுக்கும் இட்டுச்செல்கிறது. அதனால்தான், இடதுசாரிகளின் தொடர்ச்சியான ஆட்சி கேரளத்தில் அவசியம் என்று நாடு கருதுகிறது.இவ்வாறு பி.ராஜீவ் கூறினார்.
 

;