states

img

விஸ்மயா தற்கொலை வழக்கில் கணவர்தான்  குற்றவாளி - நீதிமன்றம் தீர்ப்பு

கேரளாவில் வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட விஸ்மயா விவகாரத்தில் அவரின் கணவர் குற்றவாளி என கொல்லம் கீழமை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. தீர்ப்பின் முழு விவரங்கள், நாளை வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு கேரள மாநிலத்தில் ஆயுர்வேத மருத்துவ மாணவி விஸ்மயா, கிரண் குமார்  என்பவருக்கும் திருமணம் நடந்தது. விஸ்மயாவுக்கு 1 ஏக்கர் மதிப்பிலான ரப்பர் தோட்ட நிலம், 100 பவுன் நகை, ரொக்கம் என வரதட்சணை கொடுக்கப்பட்டது. ஆனால் மேலும் வரதட்சணை கேட்டு கணவரால் துன்புறுத்தப்பட்டிருக்கிறார். இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான விஸ்மயா கடந்த ஆண்டு ஜூன் மாதம் குளியலறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த விவகாரம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 
இதைத்தொடர்ந்து கிரண் மீது விஸ்மயா குடும்பத்தினர் வழக்கு தொடர்ந்தனர். விஸ்மயா மரணத்தை தொடர்ந்து வரதட்சணை தொடர்பான புகார்களை அளிக்க 24 மணி நேர ஹெல்ப்லைன் எண் ஏற்படுத்தப்படும் என முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்தார். 
வழக்கு தொடர்பான தொடர் விசாரணையை தொடர்ந்து, மோட்டார் வாகன உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த கிரண் குமார், இந்திய அரசியலமைப்பு சட்ட 304 பி (வரதட்சணை கொடுமையால் மரணம்), 498 ஏ (கணவர் அல்லது உறவினரால் கொடுமைப்படுத்தப்படுவது), 306 (தற்கொலைக்கு தூண்டுதல்), 506 (மிரட்டல் விடுவது) உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் கைது செய்யப்பட்டார்.
அதன்படி, அவர் பணியில் இருந்து நீக்கப்பட்டு கடந்த 1 வருடமாக நீதிமன்ற காவலில் உள்ளார். கிரண் குமார் ஜாமீன் கோரிய மனு பலமுறை நிராகரிக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு மார்ச் மாதம் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இந்நிலையில், இவ்வழக்கு கேரள மாநிலம் கொல்லம் கீழமை நீதிமன்றத்தில் நீதிபதி சுஜித் கே.என் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி 42 சாட்சியங்கள், 108 ஆவணங்கள் மற்றும் விஸ்மயாவின் செல்போன் உரையாடல்கள் ஆகியவற்றை விசாரணை அறிக்கையாக ஏற்றுக்கொண்டார். குறிப்பாக காவல்துறையினர் 507 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தனர். அதைத்தொடர்ந்து அனைத்து தரப்பு விசாரணைகளும் முடிவடைந்த நிலையில் நீதிபதி இன்று தீர்ப்பு வழங்கினார்.தீர்ப்பு வழங்கப்படுகையில், விஸ்மயாவின் தந்தை திரிவிக்ரமன் நீதிமன்றத்தில் இருந்தார். அங்கு அவர் `கிரணுக்கு மிக அதிகபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும். இந்த தண்டனை, இந்த சமுதாயத்துக்கான பாடமாக இருக்க வேண்டும் என்று நீதிமன்றத்தை கேட்டுக்கொண்டார்.
இதைத்தொடர்ந்து நீதிமன்றம் சாட்சியங்கள், மருத்துவ பரிசோதனை அடிப்படையில் `விஸ்மயாவின் கணவர் கிரண் குமார் தான் குற்றவாளி. வரதட்சணை கொடுமை, உடல் அல்லது மனநலப் பாதிப்பை ஏற்படுத்துதல், தற்கொலைக்குத் தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கிரண் குமார் குற்றவாளி என தீர்ப்பு வழங்கியது. தண்டனை விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் நீதிபதி தெரிவித்தார். அவ்விவரங்கள் நாளை வெளியாகுமென சொல்லப்பட்டுள்ளது. தொடர்ந்து கிரணின் ஜாமீன் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

;