states

img

வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தை இழந்த பெண்ணிற்கு அரசு வேலை: கேரள அமைச்சரவை முடிவு

வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தை இழந்த பெண்ணிற்கு அரசு வேலை வழங்க முடிவெடுத்துள்ளதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலம், வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோரை காணவில்லை. பலரும் ஒட்டுமொத்த குடும்பத்தையும் இழந்து தவித்து வருகின்றனர்.

அதில், இளம்பெண் ஸ்ருதி என்பவரின் மொத்த குடும்பத்தினரும் மண்ணில் புதைந்து உயிரிழந்துள்ளனர்.

9 பேர் கொண்ட குடும்பத்தில் ஸ்ருதி மட்டுமே உயிருடன் உள்ளார்.

ஸ்ருதிக்கு வரும் டிசம்பர் மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில், மணமகனும் ஒரு விபத்தில் உயிரிழந்தார்.

நிலச்சரிவில் ஒட்டுமொத்த குடும்பத்தையும் இழந்த நிலையில், தனது வருங்கால கணவருடன் வாழ்கையை தொடர இருந்த நிலையில், மணமகனும் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், ஸ்ருதிக்கு அரசு வேலை வழங்குவதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பினராயி விஜயன் பேசுகையில், வயநாடு நிலச்சரிவில் தாய், தந்தை இருவரையும் இழந்த 6 குழந்தைகளுக்கு தலா 10 லட்சம் வீதம் நிதி வழங்குவது எனவும், பெற்றோரில் ஒருவரை இழந்த 8 குழந்தைகளுக்கு தலா 5 லட்சம் ரூபாய் வீதம் வழங்க அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

வயநாட்டில் வீடும், நிலமும் இழந்தவர்களை மறு குடியமர்த்த இடம் தேடும் பணி நடந்து கொண்டிருக்கிறது.

வயநாட்டில் மேப்பாடி பஞ்சாயத்தில் நெடும்பாலா எஸ்டேட், கல்பற்றா நகராட்சியில் எல் ஸ்டோன் எஸ்டேட் ஆகிய இடங்களில் டவுன்ஷிப் கட்டமைக்க ஆலோசித்து வருகிறோம்.

பேரிடர் சட்டம் 2005-இன் படி இடத்தை கையகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்மூலம் விரைந்து இடத்தை கையகப்படுத்த முடியும். நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளில் மக்கள் வசிக்க முடியாத அளவுக்கு உள்ள இடங்களில் உள்ளவர்களை வேறு இடத்தில் குடியமர்த்த 2-ஆம் கட்ட திட்டமும் தீட்டப்பட்டுள்ளது.

வயநாடு நிலச்சரிவில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் இழந்த ஸ்ருதிக்கு, திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில், வருங்கால கணவரும் விபத்தில் உயிரிழந்துள்ளார்.

எனவே, ஸ்ருதிக்கு அரசு வேலை வழங்க அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஸ்ருதி, அரசு வேலை வழங்குவதாக அறிவித்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. வயநாட்டில் வேலை வழங்கினால் நன்றாக இருக்கும் என தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்.