states

img

நெருக்கடியில் தவிக்கும் ரப்பர் விவசாயிகள் ஒன்றிய அரசை கண்டித்து போராட முடிவு

திருவனந்தபுரம், மார்ச் 30  – ரப்பர் விவசாயிகளுக்கு உதவ முடியாது என்கிற ஒன்றிய அரசின் நிலைப்பாட்டைக் கண்டித்தும், நெருக்கடி யில் தவிக்கும் ரப்பர் விவசாயிகளை பாதுகாக்கவும் போராட்டம் நடத்த அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் கேரள மாநிலக் குழு முடிவு செய்துள்ளது. துயரத்தில் உள்ள ரப்பர் விவசாயிகளுக்கு தன்னால் உதவ முடியாது என அண்மையில் அமைச்சர் பியூஷ் கோயல் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். ஒன்றிய பட்ஜெட் அறிவிப்பின் பாகுபாட்டை அம்பலப்படுத்தியும், நெருக்கடியைத் தீர்க்க தலையிடக் கோரியும் இடதுசாரி எம்.பி.க்கள் அளித்த மனுவுக்கு பதில் அளிக்கையில் தனது நிலைப்பாட்டை ஒன்றிய அரசு தெளிவுபடுத்தியுள்ளது. கலப்பு ரப்பர் இறக்குமதி தொடர்பான பட்ஜெட் அறிவிப்பு  மக்களின் கண்களில் மண்ணை தூவும் செயலாக உள்ளது. ஆசியான் உடன்படிக்கைக்கு பிறகு, வரி விலக்குடன் ரப்பர் இறக்குமதி செய்வது விவசாயிகளை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆசியான் நாடுகள் உட்பட இறக்குமதி பொருட்களுக்கு வரியை அதிகரிக்க வேண்டும் என கேரள விவசாயிகள் சங்கம் மற்றும் இடதுசாரி இயக்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. ஒன்றிய அரசு ஆதரவு விலை அறிவித்துள்ள 25 பயிர்களில்  ரப்பர் இல்லை. ரப்பர் விவசாயிகளுக்கு உதவுவதே ஒன்றிய அரசின் நோக்கமாக இருந்தால், கலப்பு மற்றும் இயற்கை  ரப்பர் மீதான இறக்குமதி வரியை சமமாக உயர்த்தி ஆதரவு விலையை அறிவிக்க வேண்டும். எனவே, அனைத்து விவசாயிகளும் போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என விவசாயிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.