politics

img

உத்தரகாண்ட் பா.ஜ.க எம்.எல்.ஏ மீது பெண் நிர்வாகி பாலியல் புகார்

உத்தரகாண்ட் மாநிலம், ஹரித்வார் மாவட்டத்தின் பஹத்ராபாத்தில் உள்ள ஜ்வாலாபூரைச் சேர்ந்த பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் சுரேஷ் ரத்தோர். இவர் மீது பேகம்புரா கிராமத்தைச் சேர்ந்த பா.ஜ.க பெண் நிர்வாகி ஒருவர் காவல் நிலையத்தில் பாலியல் வன்கொடுமை புகார் அளித்துள்ளார். இந்த புகாரில், சில மாதங்களுக்கு முன்னர் சுரேஷ் ரத்தோர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், இதுகுறித்து வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவேன் என மிரட்டியதாலேயே அப்போது தான் புகார் அளிக்க முடியவில்லை என பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில் போலிசார் பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் சுரேஷ் ரத்தோர் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் பஹத்ராபாத் காவல்நிலைய அதிகாரி மகேந்திர புன்திர் தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலத்தில் நேற்று சொகுசு விடுதியில் மது விருந்து மற்றும் சூதாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது உத்தரகாண்ட் மாநிலத்தில் பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

;