politics

img

ரூ. 10 லட்சம் மதிப்பில் கோகைன் கடத்திய வழக்கு.... பாஜக பெண் தலைவர் பமீலாவை மாட்டி விட்டதே பாஜகவினர்தான்..

கொல்கத்தா:
மேற்குவங்க மாநில பாஜக இளைஞரணி பெண் தலைவர் பமீலா கோஸ்வாமி, ரூ. 10 லட்சம் மதிப்புள்ள கோகைன் போதைப்பொருளை காரில் கடத்த முயன்று, கடந்த வாரம் கையும் களவுமாக பிடிபட்டார்.பாஜக இளைஞரணி தலைவர் பமீலா கோஸ்வாமியும், அவரின் நண்பர் பிரபீர் குமாரும் திருமணம் செய்துகொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்துள்ளனர். அத்துடன் நீண்டகாலமாக போதைப்பொருள் கடத்தலிலும் கூட்டுச் சேர்ந்து, கோடிக்கணக்கில் சம்பாதித்து வந்துள்ளனர். ஆனால் பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான் என்ற கதையாக 90 கிராம் கோகைன் போதைப்பொருளுடன் சிக்கிக் கொண்டனர்.

இந்நிலையில், தன்னை மாட்டிவிட்டதே பாஜக தலைவர்கள்தான் என்று பமீலா கண்ணீர் விட்டுள்ளார்.பமீலா கோஸ்வாமி உள்ளிட்ட மூவரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்துச் சென்றபோது, அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது. “தன்னை சிக்கவைக்க ஏதோ சதி நடக்கிறது. பாஜக மாநிலப் பொறுப்பாளர் விஜய்வர்க்கியாவின் உறவினர் ராகேஷ் சிங் சதி செய்கிறார். அவருக்கும் இதில் தொடர்பு இருக்கிறது, அவரும் போதைப்பொருட்களை வைத்துள்ளார். இதில் சிஐடி விசாரணை தேவை. என்னிடம் ஆதாரங்கள் இருக்கின்றன” என்று பமீலா கூறியுள்ளார்.

இது மேற்குவங்க பாஜக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ராகேஷ் சிங், விஜய் வர்க்கியா ஆகிய இருவருமே தங்கள் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ளனர்.“கொல்கத்தா போலீசாரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரும் சேர்ந்து பமீலா கோஸாமியை மூளைச்சலவை செய்துவிட்டனர்” என்று ராகேஷ் சிங்கும், “நான் நீதியின் மீது நம்பிக்கை வைத்துள்ளேன். சட்டம் அதன் கடமையைச்செய்யும். என்ன நடக்கிறது என்பதே புரியவில்லை இப்போது என்னால் ஏதும் கூற 
முடியாது” என்று பாஜக மேலிடப் பொறுப்பாளர் விஜய்வர்க்கியாவும் தெரிவித்துள்ளனர். மற்றொரு புறத்தில் பமீலாவுக்கு போதைமருந்து உட்கொள்ளும் பழக்கம் இருந்தது என்று அவரது தந்தையே போலீசில் கூறியிருப்பதாகவும், கோகைன் கடத்தல் பற்றியும் அவர்தான் தகவல் அளித்தார் என்றும் காவல்துறைத் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

;