பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, மக்களவையில் திங்களன்று ஒரு விபரத்தை அளித்திருக்கிறார். பெட்ரோலியப் பொருட்கள் மீதான மத்திய கலால் வரி மற்றும் செஸ் வரி ஆகியவற்றின் மூலம் 2020-21 நிதி ஆண்டில் 3.4லட்சம் கோடி அளவிற்கு ஒன்றிய அரசு வருவாய் ஈட்டியுள்ளது; அந்த வருவாயில் பெரும்பகுதி பணம் நாடு முழுவதும் உள்ள ஏழை மக்களுக்கு பிரதமர் கரீப் கல்யாண்யோஜனா திட்டத்தின் மூலம் இலவச தடுப்பூசி செலுத்துவதற்காக செலவழிக்கப்பட்டுள்ளது என்று வாய்கூசாமல் தெரிவித்திருக்கிறார்.
அப்படியானால் தடுப்பூசி செலுத்துவதற்காக ரூ.30ஆயிரம் கோடி பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதே, அது என்னாயிற்று?
இதுவரையிலும் அத்தொகையில் ரூ.10ஆயிரம் கோடிக்கும் குறைவாகத்தான் செலவழிக்கப்பட்டுள்ளது. ஆனால் பெட்ரோலியம் மீதான செஸ்வரி மூலம் அரசுக்கு கிடைத்த தொகைரூ.3.4லட்சம் கோடி. இலவசமாக தடுப்பூசி வழங்கப்படவில்லை. தடுப்பூசிக்கு மக்கள் அல்லது மக்கள் சார்பில் அந்தந்த மாநில அரசுகள் கட்டணம் செலுத்தியிருக்கின்றன. மோடி அரசு தினந்தோறும் பெட்ரோலிய விலையை உயர்த்தி கொள்ளையடித்திருப்பது மட்டுமல்ல அப்பட்டமாக நாடாளுமன்றத்தில் பொய்யுரைக்கிறது.