india

img

கோவிஷீல்டு பரிசோதனையில் பங்கேற்றவரின் மனைவி, மகளுக்கு தடுப்பூசி இல்லை.... வியாபாரத்தை பெருக்கிய சீரம் நிறுவனம் மீது கடும் குற்றச்சாட்டு....

புனே:
 கோவிஷீல்டு  கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனையில் பங்கேற்ற தன்னார்வலர், தனது மனைவி மற்றும் மகளுக்கு தடுப்பூசி கிடைக்காமல் அவதிப்பட்டு  வருகிறார். கோவிஷீல்டு மருந்தை தயாரித்த சீரம் நிறுவனம்  என்னை பயன்படுத்தி வியாபாரத்தை பெருக்கிக்கொண்டது என்று  கடுமையான குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். 

இந்தியாவில் உள்ள சீரம் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட கோவிஷீல்டு தடுப்பூசியின் இரண்டாம் கட்ட மருத்துவ பரிசோதனையில் சிலர் பங்கேற்றனர். தன்னார்வலராக பங்கேற்ற முதல் 10 இந்தியர்களில் புனேவை சேர்ந்த தன்னார்வலர் சந்தோஷ் கே.மோர் (50) என்பவர்  கடந்த ஆண்டு ஆகஸ்ட் 26 ஆம் தேதியன்று முதல் மருந்தையும், செப்டம்பர் 29 அன்று இரண்டாவது மருந்தையும் பரிசோத னைக்காக போட்டுக் கொண்டார். ஆனால் இன்று அவரது மனைவி மற்றும் மகளுக்கு தடுப்பூசி கிடைக்கப் பெறாமல் அவதிப்பட்டு வருகிறார். பிரதமர் மோடி, சீரம் நிறுவனம், உள்ளூர் நிர்வாகம் வரை பலரிடம் முறையிட்டும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டி உள்ளார். 

இதுகுறித்து  சந்தோஷ் கே.மோர் கூறுகையில், ‘கொரோனா தடுப்பூசி கண்டு பிடிப்பதற்காக ஆரம்பகால மருத்துவ பரிசோதனைக்கு எவரும் முன்வராத நேரத்தில், நான் தன்னார்வலராக என்னை பரிசோதனைக்கு உட்படுத்த சம்மதித்தேன். இதற்கு எனது மனைவி மற்றும் இரண்டு மகள்கள் ராதா (17), இஷா (19) ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஏறக்குறைய ஒரு வருடம் கழித்து, 12 முதல் 18 வயதுடையவர்களுக்கான ஜிகோவ்-டி தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனைகளை ஜிடாக் மருத்துவ நிறுவனம் தொடங்கியது. இந்த மருத்துவ பரிசோதனையில் எனது இளைய மகள் ராதா, தன்னார்வலராக இணைந்தார். அவருக்கு இதுவரை மூன்று மருந்து செலுத்தப்பட்டுள்ளது. ஆனால், இன்று மனிதநேயமற்ற முறையில் என் மனைவி மற்றும் மற்றொரு மகளுக்கு தடுப்பூசி போடுமாறு சீரம் நிறுவனத்திடம் கெஞ்ச வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன். இதுதொடர்பாக பிரதமர் மோடியின் அலுவலகம், சீரம் நிறுவனம் ஆகியோரிடம் கோரிக்கை விடுத்தும் எவரும் கண்டுகொள்ளவில்லை.கடந்த சில மாதங்களாகவே ‘கோவின்’ ஆப்ஸ் மூலம் தடுப்பூசி போட முன்பதிவு செய்தோம். ஆனால், தடுப்பூசி பற்றாக்குறையால் காரணங்களை கூறி என் மனைவிக்கும், மகளுக்கும் தடுப்பூசி போடவில்லை. இது மிகவும் ஏமாற்றமளிக்கிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் கோவிஷீல்டு மருத்துவ பரிசோதனையில் நான் பங்கேற்க முடிவு செய்தபோது, என் மனைவியும் என் மகள்களும்அழுததை என்னால் மறக்கமுடியாது. ஆனால்,இந்த மருந்து நிறுவனங்களுக்கு எங்கள் தியாகத்தின் மதிப்பு தெரியவில்லை. அவர்கள் எங்களை பயன்படுத்திக்கொண்டார்கள். தங்களின் வியாபாரத்தையும் பெருக்கிக் கொண்டனர்.

மருந்து நிறுவனங்கள், அரசின் சுரண்டல்
மருத்துவப் பரிசோதனை தன்னார்வலர்கள் மீது மருந்து நிறுவனங்கள் மற்றும் அரசாங்கம் நடத்திய ஒருவித சுரண்டலாகும். குழந்தை தன்னார்வலர்களின் பற்றாக்குறை ஏற்பட்ட போது, நான்கு பெற்றோர்களை ஊக்குவித்து, அவர்களின் குழந்தைகளை பரிசோதனைக்கு உட்படுத்தினேன். நாட்டிற்காக தன்னலமற்ற பங்களிப்பை நாங்கள் அளித்த போதிலும், என் மனைவி மற்றும் மற்றொரு மகளுக்காக ‘தடுப்பூசி பிச்சை’ எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன் என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

;