மராத்தா சமூகத்திற்கான தனி இட ஒதுக்கீட்டை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
மகாராஷ்டிராவில் மராத்தா சமூகத்தினருக்கு 16 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் வகையில், சமூக மற்றும் கல்வியில் பின்தங்கிய பிரிவினருக்கான இடஒதுக்கீட்டு சட்டம், 2018-ல் அறிமுகம் செய்யப்பட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கு அசோக் பூஷண் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மராத்தா சமூகத்தினருக்கு மகாராஷ்டிர அரசு வழங்கிய இட ஒதுக்கீட்டை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இது தொடர்பாக நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறி இருப்பதாவது:-
கடந்த 1992-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நாங்கள் மீண்டும் உறுதி செய்கிறோம். அதனை மறு பரிசீலனை செய்வதற்கான வாய்ப்பே இல்லை. அதன்படி மராத்தா சமூகத்தினருக்கு மகாராஷ்டிர அரசு வழங்கிய இட ஒதுக்கீட்டை ரத்து செய்கிறோம்.
மராத்தா சமூகத்தினருக்கு அதிக இடஒதுக்கீட்டை வழங்குவதற்கான எந்த முகாந்திரமும் இல்லை. கல்வி, வேலைவாய்ப்பில் மராத்தாவுக்கு கூடுதலாக 13 சதவீதம் இட ஒதுக்கீடு தருவது சட்டத்துக்கு எதிரானது. இவ்வாறு நீதிபதிகள் அந்த உத்தரவில் கூறியுள்ளனர்.