பிரதமர் ஏன் இதுவரை மணிப்பூருக்கு செல்லவில்லை என்று காங்கிரஸ் எம்.பி கௌரவ் கோகோய் கேள்வி எழுப்பியுள்ளார்.
மணிப்பூர் கலவரம் - வன்முறை வெறியாட்டங்கள் தொடர்பாக பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் நேரடியாக விளக்கம் அளிக்க மறுத்து வரும் நிலையில், மக்களவையில் மோடி அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்க்கட்சிகள் கொண்டு வந்தன. இதன் மீதான விவாதம் இன்று தொடங்கியது. காங்கிரஸ் எம்.பி கௌரவ் கோகோய் விவாதத்தை தொடங்கி வைத்தார்.
மக்களவையில் பேசிய கௌரவ் கோகோய் கூறியதாவது:
"மணிப்பூர் மாநிலத்தில் பெண்கள், இளைஞர்கள், குழந்தைகளுக்கு நீதி வழங்கப்பட வேண்டும். மணிப்பூர் பற்றி எரிகிறது என்றால் ஒட்டுமொத்த நாடும் பற்றி எரிவதாகவே அர்த்தம். மணிப்பூரில் பாஜகவின் இரட்டை என்ஜின் ஆட்சி தோல்வி அடைந்துவிட்டது. பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும் என்பதற்காகவே நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.
பிரதமர் ஏன் இதுவரை மணிப்பூருக்கு செல்லவில்லை; மணிப்பூர் வன்முறையை பற்றிப் பேசுவதற்கு கிட்டத்தட்ட 80 நாட்கள் ஏன் தேவைப்பட்டன, அதுவும் வெறும் 30 வினாடிகள் மட்டுமே அவர் பேசினார்; மணிப்பூர் முதல்வரை ஏன் இன்னும் பதவி நீக்கம் செய்யவில்லை?" என்று அவர் சரமாரியாக கேள்வி எழுப்பினார்.