india

img

தேர்தல் ஆணையர்கள் நியமன சட்டத்திற்கு எதிரான வழக்கு: மார்ச் 15ஆம் தேதி விசாரணை

மோடி அரசு கொண்டுவந்த தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் சட்டம் 2023இன் கீழ், தேர்தல் ஆணையர்களை நியமனம் செய்யத் தடை விதிக்க கோரிய மனுக்களை, வரும் மார்ச் 15-ஆம் தேதி விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புக்கொண்டுள்ளது.
மக்களவைத் தேர்தலை நடத்துவதற்கான பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில், தேர்தல் ஆணையர் அருண் கோயல் தனது பதவியை (மார்ச் 9) சனிக்கிழமை மாலை ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை உடனடியாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவும் ஏற்றுக் கொண்டுள்ளார். ஏற்கனவே, மற்றொரு தேர்தல் ஆணையரான அனூப் சந்திர பாண்டே 2024-ஆம் ஆண்டு பிப்ரவரியில் ஓய்வுபெற்றார். அவர் ஓய்வுபெற்று 23 நாட்களாகியும் புதிய ஆணையர் நியமிக்கப்படவில்லை. இந்நிலையில் தற்போது தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் ஒருவர் மட்டுமே பொறுப்பிலுள்ளார். 
கடந்தாண்டு டிசம்பரில் மோடி அரசால் கொண்டு வரப்பட்ட தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் (நியமனம், சேவை  நிபந்தனைகள் மற்றும் பதவிக்காலம்) சட்டம்-2023, தேர்தல் ஆணையத்தில் தற்போது காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட பிரதமருக்கு அனைத்து அதிகாரங்களையும் வழங்கியுள்ளது. இந்த நிலையில், மோடி அரசு கொண்டுவந்த தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் சட்டம் 2023இன் கீழ், தேர்தல் ஆணையர்களை நியமனம் செய்யத் தடை விதிக்க கோரி ஜனநாயக சீர்திருத்தக் கூட்டமைப்பு (ஏடிஆர்) மற்றும் காங்கிரஸ் சார்பில் ஜெயா தாக்கூர் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்களை, வரும் மார்ச் 15-ஆம் தேதி விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புக்கொண்டுள்ளது.